
ஏவுகணை தாக்குதலுக்கு பதிலடி; நூற்றுக்கும் மேற்பட்ட ட்ரோன்களை இஸ்ரேல் மீது ஏவியது ஈரான்
செய்தி முன்னோட்டம்
கடந்த சில மணி நேரத்தில் தங்கள் நாட்டின் மீது ஈரான் நூற்றுக்கும் மேற்பட்ட ட்ரோன்களை ஏவியதாக இஸ்ரேல் ராணுவம் கூறியுள்ளது.
இந்த தாக்குதல், முன்னதாக அதிகாலையில் ஈரான் மீது இஸ்ரேல் மேற்கொண்ட ஏவுகணை தாக்குதல்களுக்கு பதிலடியாக மேற்கொள்ளப்பட்டுள்ளது.
இஸ்ரேல் ராணுவத்தின் தலைமை செய்தித் தொடர்பாளர் பிரிகேடியர் ஜெனரல் எஃபி டெஃப்ரின் ஈரானின் பதில் தாக்குதல் குறித்து கூறுகையில், "கடந்த சில மணி நேரத்தில், ஈரான் இஸ்ரேலை நோக்கி 100க்கும் மேற்பட்ட ட்ரோன்களை ஏவியுள்ளது, மேலும் அனைத்து பாதுகாப்பு அமைப்புகளும் அச்சுறுத்தல்களை தடுக்க செயல்படுகின்றன." என்றார்.
சுமார் 200 இஸ்ரேலிய போர் விமானங்கள் இந்த நடவடிக்கையில் பங்கேற்றதாகவும், சுமார் 100 இலக்குகளைத் தாக்கியதாகவும், தாக்குதல்கள் தொடர்ந்து நடைபெற்று வருவதாகவும் டெஃப்ரின் மேலும் கூறினார்.
பலி
ஈரானின் புரட்சிகர காவல்படை தலைவர் ஜெனரல் ஹொசைன் சலாமி பலி
முன்னதாக, வெள்ளிக்கிழமை (ஜூன் 13) காலை இஸ்ரேலின் தாக்குதல்களில் துணை ராணுவ புரட்சிகர காவல்படையின் தலைவர் ஜெனரல் ஹொசைன் சலாமி கொல்லப்பட்டதை ஈரானிய அரசு தொலைக்காட்சி உறுதிப்படுத்தியுள்ளது.
ஜெனரல் ஹொசைன் சலாமி ஈரானின் அதிகார மட்டத்தில் மிகவும் சக்திவாய்ந்த நபர்களில் ஒருவராக இருந்தார்.
தற்போது அவரது மரணம் ஈரானின் தலைமைக்கு கடும் பின்னடைவை ஏற்படுத்தி உள்ளது.
இது ஈரானுக்கு கடந்த 20 மாதங்களாக மத்திய கிழக்கில் நடந்து வரும் மோதல் மற்றும் அமைதியின்மையில் தொடர்ச்சியான பின்னடைவாக அமைந்துள்ளது.
ஆறு ஆண்டுகளுக்கு முன்பு முக்கிய பொறுப்பிற்கு வந்த ஜெனரல் ஹொசைன் சலாமி, அமெரிக்கா மற்றும் இஸ்ரேலுக்கு எதிராக தீவிர நிலைப்பாட்டைக் கொண்டிருந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.