Page Loader
வசிரிஸ்தான் குண்டுவெடிப்பில் தொடர்பா? பாகிஸ்தான் குற்றச்சாட்டை நிராகரித்தது இந்தியா
பாகிஸ்தான் குற்றச்சாட்டை நிராகரித்தது இந்தியா

வசிரிஸ்தான் குண்டுவெடிப்பில் தொடர்பா? பாகிஸ்தான் குற்றச்சாட்டை நிராகரித்தது இந்தியா

எழுதியவர் Sekar Chinnappan
Jun 29, 2025
08:00 am

செய்தி முன்னோட்டம்

வடக்கு வசிரிஸ்தானில் சமீபத்தில் நடந்த தற்கொலை குண்டுவெடிப்பில் 13 பாகிஸ்தான் ராணுவ வீரர்கள் கொல்லப்பட்டதற்கு இந்தியா தான் காரணம் என்று பாகிஸ்தான் குற்றம் சாட்டியதை இந்தியா கடுமையாக நிராகரித்துள்ளது. ஞாயிற்றுக்கிழமை (ஜூன் 29 ), இந்திய வெளியுறவு அமைச்சகம் (MEA) இது தொடர்பான ஒரு கடுமையான அறிக்கையை வெளியிட்டது. பாகிஸ்தான் ராணுவத்தின் அதிகாரப்பூர்வ அறிக்கையை தாங்கள் பார்த்ததாகவும், குற்றச்சாட்டை உறுதியாக நிராகரித்ததாகவும், அது அடிப்படையற்றது மற்றும் அரசியல் நோக்கம் கொண்டது என்றும் வெளியுறவு அமைச்சகம் குறிப்பிட்டது. முன்னதாக, சனிக்கிழமை அன்று கைபர் பக்துன்க்வா மாகாணத்தின் காடி கிராமத்தில், ராணுவ வீரர்களின் வாகனத்தின் மீது தற்கொலை குண்டுதாரி ஒருவர் வெடிபொருட்கள் நிரப்பப்பட்ட வாகனத்தை மோதியதில் இந்த தாக்குதல் நடந்தது.

உயிரிழப்பு

13 ராணுவ வீரர்கள் உயிரிழப்பு

இந்த தாக்குதலில் பாகிஸ்தான் ராணுவத்தைச் சேர்ந்த 13 வீரர்கள் உயிரிழந்தனர் மற்றும் மூன்று பேர் காயமடைந்தனர். இந்த சம்பவத்தை வடக்கு வசிரிஸ்தானின் மிர் அலியில் ஒரு வாகனத் தொடரணியை குறிவைத்து பயங்கரவாதிகள் நடத்திய கோழைத்தனமான தாக்குதல் என்று பாகிஸ்தான் ராணுவத்தின் செய்தி ஊடகப் பிரிவான இன்டர்-சர்வீசஸ் பப்ளிக் ரிலேஷன்ஸ் (ISPR) கூறியது. ஹபீஸ் குல் பகதூர் குழுவுடன் தொடர்புடைய போராளிப் பிரிவான உசுத் அல்-ஹர்ப் இந்த தாக்குதலுக்கு பொறுப்பேற்றுள்ளது. கைபர் பக்துன்க்வா முதலமைச்சர் அலி அமின் கந்தாபூர் இந்தத் தாக்குதலைக் கண்டித்து, உயிரிழந்த வீரர்களுக்கு அஞ்சலி செலுத்தினார். அவர்களை நாட்டின் பாதுகாப்புக்காக தங்கள் உயிரைத் தியாகம் செய்த தியாகிகள் என்று அழைத்தார்.

பயங்கரவாதம்

பயங்கரவாத தாக்குதல்

இந்தத் தாக்குதல் பாகிஸ்தானின் வடமேற்குப் பகுதியில் அதிகரித்து வரும் பாதுகாப்பு நெருக்கடியை எடுத்துக்காட்டுகிறது. 2022 நவம்பரில் தெஹ்ரீக்-இ-தலிபான் பாகிஸ்தானுடனான (TTP) போர் நிறுத்தம் முறிந்ததிலிருந்து கைபர் பக்துன்க்வா மற்றும் பலுசிஸ்தானில் பயங்கரவாத சம்பவங்களில் குறிப்பிடத்தக்க அதிகரிப்பு ஏற்பட்டுள்ளதாக அறிக்கைகள் குறிப்பிடுகின்றன. பயங்கரவாதம் தொடர்பான இறப்புகள் ஒரு வருடத்தில் 45 சதவீதம் அதிகரித்துள்ள நிலையில், பாகிஸ்தான் இப்போது உலகளாவிய பயங்கரவாத குறியீடு 2025 இல் இரண்டாவது இடத்தில் உள்ளது குறிப்பிடத்தக்கது.