Page Loader
ஆபரேஷன் காவேரி: சூடானில் இருந்து 278 இந்தியர்கள் மீட்பு 
மீட்கப்பட்ட 278 பேரில் குழந்தைகளும் அடங்குவர்.

ஆபரேஷன் காவேரி: சூடானில் இருந்து 278 இந்தியர்கள் மீட்பு 

எழுதியவர் Sindhuja SM
Apr 25, 2023
05:46 pm

செய்தி முன்னோட்டம்

சூடானில் சிக்கித் தவித்த இந்தியர்களின் முதல் குழு, அந்நாட்டில் இருந்து இந்திய கடற்படையின் போர்க்கப்பலில் வெளியேறியது என்று வெளியுறவுத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது. INS சுமேதா கப்பலில் உள்ள இந்தியர்களின் புகைப்படங்களை வெளியுறவுத்துறை செய்தித் தொடர்பாளர் அரிந்தம் பாக்சி ட்வீட் செய்துள்ளார். "ஆபரேஷன் காவேரியின் கீழ், சூடானில் சிக்கித் தவித்த இந்தியர்களின் முதல் குழு அந்நாட்டில் இருந்து வெளியேறியது. INS சுமேதா கப்பல், 278 பேருடன் போர்ட் சூடானில் இருந்து ஜெட்டாவுக்கு புறப்பட்டது." என்று அவர் ட்விட்டரில் தெரிவித்துள்ளார். மீட்கப்பட்ட 278 பேரில் குழந்தைகளும் அடங்குவர். சூடான் ராணுவத்திற்கும் துணை ராணுவ விரைவு ஆதரவுப் படைகளுக்கும்(RSF) இடையே நடந்து வரும் மோதல்களால் இதுவரை 427 பேர் உயிரிழந்துள்ளனர்.

details

இந்தியர்களை வெளியேற்றுவதற்கான திட்டத்தை செயல்படுத்த வேண்டும்: மோடி

ஆபரேஷன் காவேரியின் ஒரு பகுதியாக இந்தியா இரண்டு போக்குவரத்து விமானங்களை ஜெட்டாவிலும், INS சுமேதா கப்பலை போர்ட் சூடானிலும் மீட்பு பணிக்காக நிறுத்தி வைத்திருக்கிறது. INS சுமேதா கப்பல் ஜெட்டாவை அடைந்ததும், அங்கிருந்து போக்குவரத்து விமானங்கள் மூலம் சூடானில் இருந்து மீட்கப்பட்ட இந்தியர்கள் வீட்டிற்கு அழைத்து வரப்படுவார்கள். கிட்டத்தட்ட 3000 இந்தியர்கள் சூடானில் சிக்கியுள்ளதாக கூறப்படுகிறது. சூடான் தலைநகர் கார்ட்டூமின் பல்வேறு பகுதிகளில் கடுமையான சண்டை நடப்பதாகக் கூறப்படுவதால், அந்நாட்டில் பாதுகாப்பு நிலைமை தொடர்ந்து மோசமாக இருக்கிறது. கடந்த வாரம் வெள்ளிக்கிழமை நடந்த கூட்டத்தில், சூடானில் இருந்து இந்தியர்களை வெளியேற்றுவதற்கான திட்டத்தை செயல்படுத்த வேண்டும் என்று அதிகாரிகளிடம் பிரதமர் நரேந்திர மோடி கூறியிருந்தார்.