Page Loader
வங்கதேசம்: ISKCON துறவிக்காக வழக்கறிஞர்கள் ஆஜராக முன்வராததால் அடுத்த மாதம் வழக்கு ஒத்திவைப்பு
ISKCON துறவிக்காக வழக்கறிஞர்கள் ஆஜராக முன்வராததால் வழக்கு ஒத்திவைப்பு

வங்கதேசம்: ISKCON துறவிக்காக வழக்கறிஞர்கள் ஆஜராக முன்வராததால் அடுத்த மாதம் வழக்கு ஒத்திவைப்பு

எழுதியவர் Venkatalakshmi V
Dec 03, 2024
06:25 pm

செய்தி முன்னோட்டம்

வங்கதேசத்தில் தேச துரோக வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள ISKCON கோவில் துறவி சின்மோய் கிருஷ்ண தாஸ் சார்பில் எந்த வழக்கறிஞர்களும் இன்று ஆஜராகாததையடுத்து அவரது வழக்கு விசாரணை ஜனவரி 2ஆம் தேதி தள்ளி வைக்கப்பட்டது. இந்த வழக்கு தொடர்பாக, கடந்த ஆகஸ்ட் 5ஆம் தேதி, வங்கதேச பிரதமராக இருந்த ஷேக் ஹசீனா பதவி விலகிய பிறகு, அந்நாட்டில் உள்ள இந்துக்களுக்கு எதிரான தாக்குதல்கள் தொடர்ந்து வருகின்றன. இதனை எதிர்த்து, வங்கதேச சனாதானி விழிப்புணர்வு இயக்கம் போராட்டங்களை முன்னெடுத்தது. இந்த இயக்கத்தின் செய்தித்தொடர்பாளராக இருந்த சின்மோய் கிருஷ்ண தாஸ் மீது தேச துரோக வழக்கு பதிவு செய்யப்பட்டது. அதன் தொடர்ச்சியாக கடந்த நவம்பர் 25-ஆம் தேதி டாக்கா சர்வதேச விமான நிலையத்தில் கைது செய்யப்பட்டார்.

தாக்குதல்

வழக்கறிஞர் மீது நடத்தப்பட்ட கொலைவெறி தாக்குதல்

தொடர்ந்து, சின்மோய் கிருஷ்ண தாஸ் வழக்கில் கடந்த நவம்பர் 26ஆம் தேதி சட்டோகிராம் நீதிமன்றம் ஜாமீன் வழங்க மறுத்தது. அதன் பிறகு, அவரின் வழக்கறிஞர்கள் மறு சீராய்வு மனுவை தாக்கல் செய்தனர். ஆனால் அதற்கு விசாரணை நடைபெறவில்லை. இதற்கிடையே சின்மோய் கிருஷ்ண தாஸ் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டபோது ஏற்பட்ட வன்முறையில் ஒரு வழக்கறிஞர் உயிரிழந்தார். இதனால் வழக்கறிஞர்கள் சங்கம் சின்மோயின் வழக்கில் ஆஜராக தடை விதித்தது. இந்நிலையில், சின்மோய் கிருஷ்ண தாஸுக்கு ஆதரவாக செயல்பட்ட ராமன் ராய் என்ற வழக்கறிஞர் கடுமையாக தாக்கப்பட்டுள்ளதாக கொல்கத்தாவில் உள்ள இஸ்கான் அமைப்பின் செய்தித் தொடர்பாளர் ராதாரம் தாஸ் கூறியுள்ளார். கிருஷ்ண தாஸ் வழக்கில் ஆதரவாக உள்ள வழக்கறிஞர்களின் பாதுகாப்பை உறுதி செய்யுமாறு அரசிடம் இஸ்கான் கோரிக்கை வைத்துள்ளது.

ஒத்திவைப்பு

வழக்கறிஞர்கள் ஆஜர் ஆகாததால் வழக்கு ஒத்தி வைப்பு

இந்த நிலையில், இன்று சட்டோகிராம் நீதிமன்றத்தில் அவரது வழக்கு விசாரணைக்கு வந்தபோது, எந்த வழக்கறிஞர்களும் ஆஜராகவில்லை. இதையடுத்து, நீதிபதி வழக்கு விசாரணையை ஜனவரி 2-ம் தேதி ஒத்திவைத்து உத்தரவிட்டார். 17 கோடி மக்கள் தொகை கொண்ட வங்கதேசத்தில், சிறுபான்மை இந்துக்கள் 8 சதவீதமாக உள்ளனர். கடந்த ஆகஸ்ட் மாதம் முதல் 200க்கும் மேற்பட்ட இந்துக்களுக்கு எதிரான தாக்குதல்கள் நடந்துள்ளன. இந்திய வெளியுறவு அமைச்சகம், சிறுபான்மையினரை பாதுகாக்க வங்கதேச அரசுக்கு நடவடிக்கை எடுக்க வலியுறுத்தியுள்ளது.