Page Loader
மாலியில் அல்-கொய்தா தொடர்புடைய பயங்கரவாதிகளால் 3 இந்தியர்கள் கடத்தல்
சிமென்ட் தொழிற்சாலையில் பணிபுரியும் மூன்று இந்தியர்கள் கடத்தல் (பிரதிநிதித்துவ படம்)

மாலியில் அல்-கொய்தா தொடர்புடைய பயங்கரவாதிகளால் 3 இந்தியர்கள் கடத்தல்

எழுதியவர் Venkatalakshmi V
Jul 03, 2025
07:31 am

செய்தி முன்னோட்டம்

மாலியில் உள்ள ஒரு சிமென்ட் தொழிற்சாலையில் பணிபுரியும் மூன்று இந்தியர்கள், தடைசெய்யப்பட்ட பயங்கரவாத அமைப்பான அல்-கொய்தாவுடன் தொடர்புடைய பயங்கரவாதிகளால் கடத்தப்பட்டதாக அதிகாரிகள் வியாழக்கிழமை உறுதிப்படுத்தினர். மேற்கு மாலியின் ஒரு பகுதியான கெய்ஸில் உள்ள டயமண்ட் சிமென்ட் தொழிற்சாலை மீது கனரக ஆயுதம் ஏந்திய பயங்கரவாதிகள் தாக்குதல் நடத்தியபோது இந்த சம்பவம் நிகழ்ந்தது. உள்ளூர் தகவல்கள், துப்பாக்கிதாரிகள் அந்த ஆலைக்குள் நுழைந்து, தாக்குதலின் போது தொழிலாளர்களை பிணைக் கைதிகளாகப் பிடித்ததாகக் குறிப்பிடுகின்றன. மாலி முழுவதும் பல தாக்குதல்களை நடத்திய அல்-கொய்தாவுடன் தொடர்புடைய ஜமாத் நுஸ்ரத் அல்-இஸ்லாம் வால்-முஸ்லிமின் (JNIM) இந்த கடத்தலுக்கும் பின்னணியில் இருக்கலாம் என்று சந்தேகிக்கப்படுகிறது.

எதிர்வினை

வெளியுறவுத்துறை அமைச்சகம் எதிர்வினை 

இந்தத் தாக்குதலுக்கு எதிர்வினையாற்றிய இந்திய வெளியுறவு அமைச்சகம் (MEA), "வன்முறையின் ஒரு மோசமான செயல்" என்று கூறியதற்கு கடும் கண்டனம் தெரிவித்ததுடன், தொழிலாளர்களின் "பாதுகாப்பான மற்றும் விரைவான" விடுதலையை உறுதி செய்யுமாறு மாலி அரசாங்கத்தை வலியுறுத்தியது. "ஜூலை 1 ஆம் தேதி ஆயுதமேந்திய தாக்குதல் குழு ஒன்று தொழிற்சாலை வளாகத்தில் ஒருங்கிணைந்த தாக்குதலை நடத்தி மூன்று இந்தியர்களை வலுக்கட்டாயமாக பிணைக் கைதிகளாகப் பிடித்தபோது இந்த சம்பவம் நிகழ்ந்தது. இந்திய அரசாங்கம் இந்தச் செயலை சந்தேகத்திற்கு இடமின்றி கண்டிக்கிறது மற்றும் மாலி குடியரசு அரசாங்கம் நமது நாட்டினர் பாதுகாப்பாகத் திரும்புவதற்குத் தேவையான அனைத்து நடவடிக்கைகளையும் எடுக்க வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறது" என்று வெளியுறவு அமைச்சகம் ஒரு அதிகாரப்பூர்வ அறிக்கையில் தெரிவித்துள்ளது.

நடவடிக்கை

பணையக்கைதிகளை மீட்க நடவடிக்கை

பணயக்கைதிகளைப் பாதுகாக்க பமாகோவில் உள்ள இந்தியத் தூதரகம், மாலி அதிகாரிகள், உள்ளூர் சட்ட அமலாக்க அதிகாரிகள் மற்றும் டயமண்ட் சிமென்ட் தொழிற்சாலை நிர்வாகத்துடன் "நெருக்கமான மற்றும் நிலையான தொடர்பில்" உள்ளது எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. கடத்தப்பட்ட தொழிலாளர்களின் குடும்பத்தினருக்கும் தூதரகம் மீட்பு பணிகள் குறித்த தகவல் அளித்து வருகிறது. "அமைச்சகத்தின் மூத்த அதிகாரிகள் நிலைமையை உன்னிப்பாகக் கண்காணித்து வருகின்றனர், மேலும் இந்திய நாட்டினரைப் பாதுகாப்பாகவும் விரைவாகவும் விடுவிப்பதற்கு பல்வேறு மட்டங்களில் தொடர்ந்து ஈடுபட்டுள்ளனர்" என்று அந்த அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.