Page Loader
13 ஆண்டுகளில் சதமடித்த முதல் வீரர்; புதிய வரலாறு படைத்த யஷஸ்வி ஜெய்ஸ்வால்
13 ஆண்டுகளில் வெளிநாட்டு அறிமுக டெஸ்ட் போட்டியில் சதமடித்த முதல் இந்திய வீரர் யஷஸ்வி ஜெய்ஸ்வால்

13 ஆண்டுகளில் சதமடித்த முதல் வீரர்; புதிய வரலாறு படைத்த யஷஸ்வி ஜெய்ஸ்வால்

எழுதியவர் Sekar Chinnappan
Jul 14, 2023
12:37 pm

செய்தி முன்னோட்டம்

வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியின் முதல் இன்னிங்சில் இளம் இந்திய வீரர் யஷஸ்வி ஜெய்ஸ்வால் வியாழன் (ஜூலை 13) அன்று தனது அறிமுக டெஸ்ட் போட்டியில் சதமடித்தார். இதன் மூலம் அறிமுக டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் சதமடித்த 17வது இந்திய வீரர் என்ற பெருமையை பெற்றார். மேலும், கடந்த 13 ஆண்டுகளில் வெளிநாட்டில் இந்தியாவுக்காக அறிமுக டெஸ்ட் போட்டியில் சதமடித்த முதல் வீரர் என்ற சாதனையையும் படைத்துள்ளார். கடைசியாக சுரேஷ் ரெய்னா 2010இல், இலங்கையில் சதமடித்திருந்தார். ஷிகர் தவான் (2013) மற்றும் பிருத்வி ஷா (2018) ஆகியோருக்குப் பிறகு தனது அறிமுக டெஸ்டில் சதம் அடித்த மூன்றாவது இந்திய தொடக்க ஆட்டக்காரர் என்ற சாதனையையும் ஜெய்ஸ்வால் படைத்துள்ளார்.

will yashasvi become first debut double centurion

அறிமுக டெஸ்ட் போட்டியில் இரட்டை சதமடிப்பாரா யஷஸ்வி ஜெய்ஸ்வால்?

அறிமுக டெஸ்ட் போட்டியில் சதமடித்த நான்காவது இளம் வீரரான யஷஸ்வி ஜெய்ஸ்வாலின் சாதனைக்கு, கிரிக்கெட் ஜாம்பவான் சச்சின் டெண்டுல்கர் உள்ளிட்ட பலரும் தங்கள் வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர். குறிப்பிடத்தக்க வகையில், யஷஸ்வி ஜெய்ஸ்வாலின் தொடக்க ஜோடியான ரோஹித் ஷர்மாவும் 2013இல் தனது அறிமுக டெஸ்ட் போட்டியில், இதே வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிராக சதமடித்திருந்தது குறிப்பிடத்தக்கது. இரண்டாம் நாள் ஆட்டநேர முடிவில் ஜெய்ஸ்வால் 143 ரன்களுடன் களத்தில் உள்ள நிலையில், மூன்றாவது நாளிலும் தனது செயல்திறனை வெளிப்படுத்தி இரட்டை சதம் அடித்தால், அறிமுக டெஸ்ட் போட்டியில் இரட்டை சதமடித்த முதல் இந்திய வீரர் என்ற சாதனையை படைப்பார்.