ஆஷஸ் தொடரில் நடந்த அவமானம்; பீர் குடிக்காதது குறித்து ஸ்டீவ் ஸ்மித் வருத்தம்
ஆஷஸ் 2023ல், போட்டியை நடத்திய இங்கிலாந்து கிரிக்கெட் அணி, முதல் இரண்டு டெஸ்ட்களில் தோல்வியை தழுவினாலும், பின்னர் சமாளித்து தொடரை 2-2 என சமன் செய்தது. ஆனால், இந்த தொடரில் சர்ச்சைகளுக்கு பஞ்சமில்லை எனக் கூறும் வகையில், அதிக சர்ச்சைகளும் விமர்சனங்களும் முன்வைக்கப்பட்டன. ரசிகர்களிலும் சிலர் மைதானத்தில் அநாகரீகமாக நடந்து கொண்டனர். ஆஷஸ் முடிவடைந்த பிறகு, இரு அணி வீரர்களும் ஒன்றாக அமர்ந்து பீர் அருந்துவது வழக்கமான நடைமுறையாக இருந்த நிலையில், இந்த முறை அது நடக்காததால், இங்கிலாந்து அணி மீது விமர்சனங்கள் முன்வைக்கப்பட்டன. எனினும், கேப்டன் பென் ஸ்டோக்ஸ் இதற்கு ஒரு விளக்கத்தை கொடுத்தார். இந்நிலையில், ஆஸ்திரேலிய வீரர் ஸ்டீவ் ஸ்மித், அன்று நடந்தது என்ன என்பதை தெரிவித்துள்ளார்.
பீர் இல்லாததால் மனம் உடைந்ததாக ஸ்டீவ் ஸ்மித் கருத்து
ஆஷஸ் தொடரின் நடைமுறைப்படி, கடைசி டெஸ்ட் போட்டி நடந்த ஓவல் மைதானத்தில் போட்டி முடிந்த பிறகு இங்கிலாந்து மற்றும் ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணி வீரர்கள் ஒன்றாக பீர் அருந்த வேண்டும். இது குறித்து பேசியுள்ள ஸ்டீவ் ஸ்மித், "அன்று நாங்கள் இரண்டு முறை கதவைத் தட்டினோம். ஆனால் அவர்கள் வரவில்லை. இதனால் நாங்கள் அங்கிருந்து கிளம்பிவிட்டோம்." என்றார். மேலும், "ஆஷஸ் தொடருக்கு பிறகு பீர் அருந்தாமல் இருப்பது எனது கிரிக்கெட் வாழ்க்கையில் இதுவே முதல்முறை. இது அவமானமாக இருந்தது." என தெரிவித்தார். எனினும் அதன் பின்னர் பென் ஸ்டோக்ஸ் நிலைமையை விளக்கி, ஒரு இரவு விடுதியில் பீர் குடிக்க ஏற்பாடு செய்ததாகவும், தான் அங்கிருந்து கிளம்பிவிட்டதால் அதில் பங்கேற்க முடியவில்லை என வருத்தப்பட்டுள்ளார்.