Sports Round Up : இன்றைய முக்கிய விளையாட்டுச் செய்திகள்
ஞாயிற்றுக்கிழமை (டிசம்பர் 10) திட்டமிடப்பட்டிருந்த இந்தியா vs தென்னாப்பிரிக்கா இடையேயான முதல் டி20 கிரிக்கெட் போட்டி மழையால் ரத்து செய்யப்பட்டது. தலா 3 டி20 மற்றும் ஒருநாள் கிரிக்கெட் போட்டிகள் மற்றும் இரண்டு டெஸ்ட் போட்டிகளில் விளையாட இந்திய கிரிக்கெட் அணி தென்னாப்பிரிக்கா சென்றுள்ளது. இதன்படி, ஞாயிற்றுக்கிழமை சூர்யகுமார் யாதவ் தலைமையிலான இந்திய கிரிக்கெட் அணி தென்னாப்பிரிக்காவுக்கு எதிராக முதல் டி20 போட்டியில் டர்பனில் உள்ள கிங்ஸ்மீட் மைதானத்தில் விளையாட திட்டமிடப்பட்டிருந்தது. இந்திய நேரப்படி இரவு 7.30 மணிக்கு போட்டி தொடங்கவிருந்த நிலையில், விடாமல் மழை பெய்ததால் போட்டி ரத்து செய்யப்பட்டது.
மூன்றாவது டி20 போட்டியில் இந்திய மகளிர் கிரிக்கெட் அணி ஆறுதல் வெற்றி
ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற இந்தியா vs இங்கிலாந்து இடையேயான மகளிர் கிரிக்கெட் டி20 போட்டியில் இந்தியா இங்கிலாந்தை வீழ்த்தியது. மும்பை வான்கடே மைதானத்தில் நடைபெற்ற இந்த போட்டியில் முதலில் பேட்டிங் செய்த இங்கிலாந்து அணி 20 ஓவர்கள் முடிவில் 10 விக்கெட்டுகளையும் இழந்து 126 ரன்கள் மட்டுமே எடுத்தது. இதைத் தொடர்ந்து பேட்டிங் செய்த இந்தியா 19 ஓவர்களிலேயே இலக்கை எட்டி 5 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. தொடக்க வீராங்கனை ஸ்மிருதி மந்தனா அதிகபட்சமாக 48 ரன்கள் எடுத்தார். முன்னதாக, 3 போட்டிகள் கொண்ட இந்த தொடரின் முதல் இரண்டு போட்டிகளிலும் தோல்வியைத் தழுவி தொடரை இழந்த நிலையில், இந்தியா இதில் ஆறுதல் வெற்றி பெற்றுள்ளது.
தேசிய கூடைப்பந்து சாம்பியன்ஷிப் போட்டியில் பட்டம் வென்றது தமிழ்நாடு அணி
குருநானக் தேவ் உள்விளையாட்டு அரங்கில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற 73வது தேசிய கூடைப்பந்து சாம்பியன்ஷிப் போட்டியில், தமிழ்நாடு அணி ரயில்வே அணியை வீழ்த்தி பட்டம் வென்றது. தமிழகம் வலுவான தொடக்கத்தை பெற்று இடைவேளையின் போது 42-25 என முன்னிலை பெற்றது. அதன் பின்னர் இரண்டாவது பாதியில் ரயில்வே சிறப்பாக போராடினாலும், இறுதியில் 5 புள்ளிகள் வித்தியாசத்தில் 72-67 என்ற புள்ளிக்கணக்கில் தமிழகம் வென்றது. தமிழக அணி சார்பில் அதிகபட்சமாக பாலதனேஸ்வர் 17 புள்ளிகளைப் பெற்றார். இதற்காக அவர் மதிப்புமிக்க வீரர் என அறிவிக்கப்பட்டு அவருக்கு கார் பரிசளிக்கப்பட்டுள்ளது. மேலும், பட்டம் வென்ற தமிழக ஆடவர் கூடைப்பந்து அணிக்கு பரிசுத் தொகையாக ரூ.5 லட்சம் வழங்கப்பட்டுள்ளது.
யு19 ஆசிய கோப்பை கிரிக்கெட்டில் இந்தியா பாகிஸ்தானிடம் தோல்வி
துபாயில் நடைபெற்று வரும் ஆசிய கோப்பை யு19 கிரிக்கெட் தொடரில் இந்திய அணி பாகிஸ்தானிடம் 8 விக்கெட் வித்தியாசத்தில் படுதோல்வி அடைந்தது. முன்னதாக, போட்டியில் முதலில் பேட்டிங் செய்த இந்தியா 50 ஓவர்கள் முடிவில் 9 விக்கெட் இழப்பிற்கு 259 ரன்கள் எடுத்தது. இந்திய அணியில் ஆதர்ஷ் சிங் 62 ரன்களும், உதய் சஹாரன் 60 ரன்களும், சச்சின் தாஸ் 58 ரன்களும் எடுத்தனர். இதைத் தொடர்ந்து பேட்டிங் செய்த பாகிஸ்தான் அணியில் ஆசான் அவைஸ் சதமடித்து 105 ரன்களுடன் ஆட்டமிழக்காமல் அணியை 8 விக்கெட் வித்தியாசத்தில் எளிதாக வெற்றி பெறச் செய்தார்.
இங்கிலாந்து தொடரின் முதல் 3 டி20 போட்டிகளுக்கான வெஸ்ட் இண்டீஸ் அணி அறிவிப்பு
டிசம்பர் மாதம் ஐந்து போட்டிகள் கொண்ட டி20 தொடரின் முதல் மூன்று போட்டிகளில் இங்கிலாந்தை எதிர்கொள்ள 15 பேர் கொண்ட வெஸ்ட் இண்டீஸ் கிரிக்கெட் அணி அறிவிக்கப்பட்டுள்ளது. இதில், முதல் முறையாக வேகப்பந்து வீச்சாளர் மேத்யூ ஃபோர்டு அணியில் சேர்க்கப்பட்டுள்ளார். இங்கிலாந்து டி20 போட்டிகளுக்கான வெஸ்ட் இண்டீஸ் அணி: ரோவ்மன் பவல் (கேப்டன்), ஷாய் ஹோப் (துணை கேப்டன்), ரோஸ்டன் சேஸ், மேத்யூ ஃபோர்டே, ஷிம்ரோன் ஹெட்மியர், ஜேசன் ஹோல்டர், அக்கேல் ஹொசைன், அல்சாரி ஜோசப், பிராண்டன் கிங், கைல் மேயர்ஸ், குடகேஷ் போடி, நிச்சோலஸ் போட்டி, ஆண்ட்ரே ரஸ்ஸல், ஷெர்பான் ரூதர்போர்டு, ரொமாரியோ ஷெப்பர்ட்.