ரீல்ஸ் அமைச்சர் என சாடிய உதயநிதி; 'நானே அரசுப் பள்ளி மாணவிதான்' என எக்ஸ் தளத்தில் பொங்கி எழுந்த அமைச்சர் கீர்த்தனா
செய்தி முன்னோட்டம்
சிவகாசி அருகே உள்ள திருத்தங்கல் அரசுப் பெண்கள் மேல்நிலைப் பள்ளியில், அமைச்சர் கீர்த்தனா அண்மையில் நடத்திய ஆய்வின் போது மாணவிகளிடம் ஆங்கிலத்தில் கேள்வி எழுப்பிய வீடியோ சமூக வலைத்தளங்களில் பரவி பெரும் விவாதத்தைக் கிளப்பியுள்ளது. இந்த விவகாரத்தில் எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் முன்வைத்த விமர்சனத்திற்கு, "நானே ஒரு அரசுப் பள்ளி மாணவிதான்" என அமைச்சர் கீர்த்தனா தற்பொழுது எக்ஸ் (X) தளத்தில் பதிலடி கொடுத்துள்ளார்.
சர்ச்சை
சர்ச்சையை ஏற்படுத்திய பள்ளி ஆய்வு வீடியோ
அமைச்சர் கீர்த்தனா பள்ளி ஆய்வின் போது, வகுப்பறையின் முன்வரிசையில் இருந்த மாணவிகளிடம் ஆங்கிலத்தில் சில கேள்விகளைக் கேட்டுள்ளார். அதற்கு பதிலளிக்க முடியாமல் மாணவிகள் திணறியபோது, அங்கிருந்த வகுப்பாசிரியையிடம், "இதையே லாஸ்ட் பெஞ்ச் மாணவிகளை நினைத்துப் பாருங்கள்" எனக் குறிப்பிட்டுப் பேசியுள்ளார். இந்த வீடியோ இணையத்தில் வெளியாகி, அமைச்சரின் செயல்முறைக்கு எதிராக பல்வேறு எதிர்மறை விமர்சனங்கள் எழுந்தன.
ட்விட்டர் அஞ்சல்
Twitter Post
அரசுப்பள்ளியில் ஆங்கிலப் புலமையை ஆய்வு செய்கிறேன் என்ற பெயரில் ‘ரீல்ஸ் அமைச்சர்’ ஒருவர் பிஞ்சுக் குழந்தையிடம் நடந்துகொண்ட விதம் அதிர்ச்சியும் அருவருப்பும் அளிக்கிறது. It is grossly insensitive.
— Udhay (@Udhaystalin) July 6, 2026
மாணவர்களிடம் எப்படி நடந்துகொள்ள வேண்டும், எந்தச் சூழ்நிலைகளில் கேமராக்களைத் தவிர்க்க…
சாடல்
'ரீல்ஸ் அமைச்சர்': உதயநிதி ஸ்டாலின் கடும் சாடல்
இச்சம்பவம் குறித்து எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் தனது எக்ஸ் பக்கத்தில் வெளியிட்டிருந்த பதிவில், "அரசுப்பள்ளியில் ஆங்கிலப் புலமையை ஆய்வு செய்கிறேன் என்ற பெயரில் 'ரீல்ஸ் அமைச்சர்' ஒருவர் பிஞ்சுக் குழந்தையிடம் நடந்துகொண்ட விதம் அதிர்ச்சியும் அருவருப்பும் அளிக்கிறது". "It is grossly insensitive. மாணவர்களிடம் எப்படி நடந்துகொள்ள வேண்டும், எந்தச் சூழ்நிலைகளில் கேமராக்களைத் தவிர்க்க வேண்டும் என அமைச்சருக்குத்தான் முதலில் கிளாஸ் எடுக்க வேண்டும். குழந்தைகளின் தன்னம்பிக்கையை உடைப்பதை யாராலும் ஏற்றுக்கொள்ள முடியாது. விளம்பர வெறியை இத்துடன் நிறுத்திக் கொள்ளுங்கள்" என்று கடுமையாக விமர்சித்திருந்தார்.
பதிலடி
"ஆங்கிலத்தில் தடுமாறியவள் தான், வெட்கமில்லை": அமைச்சர் கீர்த்தனா பதிலடி
தன்னை நோக்கி வரும் விமர்சனங்களுக்கும், மீம்களுக்கும் பதிலடி கொடுக்கும் வகையில் அமைச்சர் கீர்த்தனா வெளியிட்டுள்ள எக்ஸ் பதிவில், "இன்று சிலர் நான் அரசுப் பள்ளி மாணவியைக் கேலி செய்ததாகப் பொய்க் கதையைப் பரப்புகிறார்கள். உண்மை என்னவென்றால், நானே அரசுப் பள்ளியில் தமிழ் வழிக் கல்வியில் படித்து வளர்ந்தவள் தான். எனக்கு இரண்டாம் மொழியாகப் பிரெஞ்ச் படிக்கும் வாய்ப்போ, உயர்தர தனியார் பள்ளி வசதியோ இருந்ததில்லை." "கார்ப்பரேட் உலகிற்குள் முதன்முதலில் சென்றபோது ஆங்கிலத்தில் தடுமாறினேன், தவறுகள் செய்துதான் கற்றுக்கொண்டேன். அதில் எனக்கு எந்த வெட்கமும் இல்லை. இன்று என்னை ஆங்கிலத்திற்காகக் கேலி செய்பவர்கள், நாளை இதேபோல் தடுமாறும் ஒரு ஏழை அரசுப் பள்ளி மாணவனையும் அவமானப்படுத்த மாட்டார்கள் என்பது என்ன நிச்சயம்?"
கேள்வி
விமர்சிக்கும் அரசியல்வாதிகளுக்கு கேள்வி
"பரப்பப்படும் அந்த வீடியோவை நான் எடுக்கவில்லை, அது ஊடகங்கள் எடுத்த காட்சி. நான் யாரையும் படம் பிடிக்கச் சொல்லவில்லை." "இன்று என்னை கேலி செய்யும் அரசியல்வாதிகள் மற்றும் அவர்களை ஆதரிப்பவர்களின் சொந்தக் குழந்தைகள் எத்தனை பேர் அரசுப் பள்ளிகளில், தமிழ் வழியில் படிக்கிறார்கள்? அரசுப் பள்ளியை நம்பாதவர்கள், அங்கு படித்து இன்று இந்த இடத்தில் நிற்கும் ஒரு பெண்ணைக் கேலி செய்வது எளிது. ஆனால், நான் இந்த இடத்தில் நிற்பதே என் பதில்" என்று அமைச்சர் கீர்த்தனா ஆக்ரோஷமாகப் பதிவிட்டுள்ளார்.
ட்விட்டர் அஞ்சல்
Twitter Post
இன்று சிலர், "அரசு பள்ளி மாணவியை கேலி செய்தார்" என்று ஒரு பொய்யான கதையை பரப்புகிறார்கள்.
— Virudhai Magal Keerthana (@Keerthana4VNR) July 7, 2026
உண்மை என்ன தெரியுமா?
நானே ஒரு அரசு பள்ளி மாணவி. நானே தமிழ் வழிக் கல்வியில் படித்தவள்.
இன்று என் ஆங்கிலத்தை வைத்து என்னை கேலி செய்கிறவர்கள், உண்மையில் என்னை மட்டும் அல்ல... என்னைப் போன்ற… pic.twitter.com/2ZKzH5bgX3