உலுக்கும் பருவமழையால் இன்றும் மூடப்பட்ட மும்பை பள்ளி, கல்லூரிகள்; நிலச்சரிவால் முடங்கிய போக்குவரத்து
செய்தி முன்னோட்டம்
மும்பையில் தொடர்ந்து பெய்து வரும் அதிதீவிர பருவமழை காரணமாக, முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக இன்றும் நகரில் உள்ள அனைத்து பள்ளிகள் மற்றும் கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. மும்பை மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் பலத்த காற்றுடன் கூடிய கனமழை பெய்யக்கூடும் என இந்திய வானிலை ஆய்வு மையம் ஆரஞ்சு அலர்ட் விடுத்துள்ளதைத் தொடர்ந்து இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது. நேற்று ரெட் அலர்ட் காரணமாகக் கல்வி நிறுவனங்கள் மூடப்பட்டிருந்த நிலையில், மழை நீடிப்பதால் இரண்டாவது நாளாக இன்றும் விடுமுறை நீட்டிக்கப்பட்டுள்ளது. அவசரத் தேவையின்றி பொதுமக்கள் யாரும் வீட்டை விட்டு வெளியே வர வேண்டாம் என்றும், ஏதேனும் அசம்பாவிதங்கள் ஏற்பட்டால் 1916 என்ற அவசர உதவி எண்ணைத் தொடர்பு கொள்ளுமாறும் பிரஹன்மும்பை மாநகராட்சி (BMC) கேட்டுக்கொண்டுள்ளது.
போக்குவரத்து
மும்பை - புனே எக்ஸ்பிரஸ்வேயில் போக்குவரத்து சீரமைப்பு
திங்கட்கிழமை பெய்த கனமழையால் மும்பை - புனே எக்ஸ்பிரஸ்வேயின் 'மிஸ்சிங் லிங்க்' பைபாஸ் பகுதியில் உள்ள சுரங்கப்பாதை 2 அருகே பயங்கர நிலச்சரிவு ஏற்பட்டது. இதனால் சுமார் 18 மணி நேரத்திற்கும் மேலாகப் போக்குவரத்து முற்றிலும் துண்டிக்கப்பட்டது. பின்னர், மலைப்பகுதி நீர்நிலைகளில் ஏற்பட்ட உடைப்புகளை சரிசெய்து, இடிபாடுகள் அகற்றப்பட்ட பின், நேற்று இரவு 10:10 மணியளவில் இரு வழிகளிலும் போக்குவரத்து தற்காலிகமாகச் சீரமைக்கப்பட்டது. இருப்பினும், ஒரு பாதையில் இன்னும் நீர் வழிந்தோடுவதால் அப்பகுதியில் வாகனங்கள் மெதுவாக இயக்கப்படுகின்றன.
மழை சேதங்கள்
மகாராஷ்டிராவை உலுக்கும் மழை சேதங்கள்
புனே மாவட்டத்தின் மாவல் பகுதியில் நிலச்சரிவில் சிக்கி ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 3 பேர் உயிரிழந்துள்ளனர். கடந்த 3 முதல் 4 நாட்களில் மட்டும் மாநிலம் முழுவதும் மழை தொடர்பான விபத்துகளில் 13 பேர் பலியாகியுள்ளனர். கர்ஜத் - லோனாவாலா போர் காட் பகுதியில் ஏற்பட்ட நிலச்சரிவு மற்றும் ரயில் தண்டவாளங்களின் கீழ் இருந்த ஜல்லிக்கற்கள் மழைநீரில் அடித்துச் செல்லப்பட்டதால், கர்ஜத் - கோபோலி இடையேயான உள்ளூர் ரயில் சேவைகள் முற்றிலும் நிறுத்தப்பட்டுள்ளன. மேலும், மேற்கு ரயில்வே பிரிவில் 40-க்கும் மேற்பட்ட ரயில்கள் ரத்து மற்றும் மாற்றம் செய்யப்பட்டுள்ளன. மோசமான வானிலை காரணமாக மும்பை நோக்கி வந்த 5 சர்வதேச மற்றும் உள்நாட்டு விமானங்கள் அருகிலுள்ள பிற விமான நிலையங்களுக்குத் திருப்பி விடப்பட்டன.