Sports Round Up : பாரா ஆசிய விளையாட்டுப் போட்டியின் முதல் நாளில் இந்தியாவுக்கு 17 பதக்கங்கள்; மேலும் பல முக்கிய செய்திகள்
ஒருநாள் உலகக்கோப்பை லீக் சுற்றில் திங்கட்கிழமை (அக்டோபர் 24) நடந்த ஆட்டத்தில் ஆப்கான் கிரிக்கெட் அணி பாகிஸ்தானை 8 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தி வெற்றி பெற்றது. முன்னதாக, டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்த பாகிஸ்தான் 50 ஓவர்கள் முடிவில் 7 விக்கெட் இழப்பிற்கு 282 ரன்கள் எடுத்தது. பாபர் அசாம் அதிகபட்சமாக 74 ரன்களும் அப்துல்லா சபீக் 58 ரன்களும் எடுத்தனர். தொடர்ந்து 283 ரன்கள் இலக்குடன் களமிறங்கிய ஆப்கான் அணியின் தொடக்க ஆட்டக்காரர்கள் ரஹ்மனுல்லா குர்பாஸ் 65 ரன்களும், இப்ராகிம் ஜத்ரான் 87 ரன்களும் எடுத்தனர். மேலும், ரஹ்மத் ஷா 77 ரன்கள் எடுத்த நிலையில், 49 ஓவரில் இலக்கை எட்டி 8 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.
பாரா ஆசிய விளையாட்டுப் போட்டியின் முதல் நாளில் 6 தங்கம் உட்பட 17 பதக்கங்களை வென்ற இந்தியா
சீனாவின் ஹாங்சோவில் நடைபெற்று வரும் மாற்றுத் திறனாளிகளுக்கான பாரா ஆசிய விளையாட்டுப் போட்டியின் முதல் நாளான திங்கட்கிழமை இந்தியா 17 பதக்கங்களை வென்றுள்ளது. இதில் 6 தங்கம், 6 வெள்ளி மற்றும் 5 வெண்கல பதக்கங்கள் அடங்கும். இந்தியா தற்போது பதக்கப்பட்டியலில் நான்காவது இடத்தில் உள்ளது. முதலிடத்தில் உள்ள சீனா 31 தங்கம் உட்பட 83 பதக்கங்களையும், இரண்டாவது இடத்தில் உள்ள ஈரான் 9 தங்கம் உட்பட 24 பதக்கங்களையும், மூன்றாவது இடத்தில் உள்ள உஸ்பெகிஸ்தான் 6 தங்கம் உட்பட 20 பதக்கங்களையும் வென்றுள்ளது.
2024இல் சவூதி அரேபியாவில் இ-ஸ்போர்ட்ஸ் உலகக்கோப்பை நடத்தப்படும் என அறிவிப்பு
2024இல் சவூதி அரேபியாவில் இ-ஸ்போர்ட்ஸ் உலகக்கோப்பையை நடத்த உள்ளதாக அந்நாட்டு பட்டத்து இளவரசர் முகமது பின் சல்மான் அறிவித்துள்ளார். இ-ஸ்போர்ட்ஸ் விளையாட்டுகளில் தீராத ஆர்வம் கொண்டவராக அறியப்படும் முகமது பின் சல்மான், கடந்த சில ஆண்டுகளாக இந்த துறையில் மிகப்பெரிய அளவில் முதலீடுகளை மேற்கொண்டு வருகிறார். இந்நிலையில், இ-ஸ்போர்ட்ஸ் மூலம் சவூதி அரேபியாவில் 2030க்குள் பல்லாயிரக்கணக்கான வேலைவாய்ப்புகளை உருவாக்கும் நோக்கத்தோடு, முதல் இ-ஸ்போர்ட்ஸ் உலகக்கோப்பையை நடத்த உள்ளதாக அறிவித்துள்ளார். சவூதி அரேபியாவில் கோடை காலத்தில் சுற்றுலா பயணிகளின் எண்ணிக்கை வீழ்ச்சி அடையும் நிலையில், அந்த நேரத்தில் 8 வாரங்கள் நடக்கும் நிகழ்வாக இந்த போட்டியை நடத்த திட்டமிடப்பட்டுள்ளது.
அபுதாபி மாஸ்டர்ஸ் பேட்மிண்டனில் ஒற்றையர் மற்றும் இரட்டையர் பிரிவில் பட்டம் வென்ற இந்தியா
அபுதாபி மாஸ்டர்ஸ் பேட்மிண்டன் சூப்பர் 100 போட்டியில் மகளிர் ஒற்றையர் பிரிவில் இந்தியாவின் உன்னதி ஹூடா சக இந்திய வீராங்கனையான சாமியா இமாத் ஃபரூக்கியை எதிர்கொண்டார். இருவருக்கும் இடையே நடந்த கடினமான ஆட்டத்தில் உன்னதி சாமியாவை 21-16, 22-20 என்ற நேர் செட் கணக்கில் வீழ்த்தி, அபுதாபி மாஸ்டர்ஸில் தனது இரண்டாவது பட்டத்தை கைப்பற்றினார். மேலும், மகளிர் இரட்டையர் பிரிவின் இறுதி ஆட்டத்தில் இந்தியாவின் அஸ்வினி பொன்னப்பா-தனிஷா கிராஸ்டோ ஜோடி டென்மார்க்கின் ஜூலி ஃபின்னே-இப்சென் மற்றும் மாய் சரோவை 21-16, 16-21, 21-8 என்ற செட் கணக்கில் போராடி வீழ்த்தினர். இதற்கிடையே, ஆடவர் பிரிவில் இந்திய வீரர்கள் யாரும் பட்டம் வெல்லவில்லை.
ரீஸ் டாப்லிக்கு பதிலாக பிரைடன் கார்ஸ் இங்கிலாந்து அணியில் சேர்ப்பு
ஒருநாள் உலகக்கோப்பை 2023 தொடரில் தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான போட்டியில் காயமடைந்த இங்கிலாந்து கிரிக்கெட் அணி வீரர் ரீஸ் டாப்லி அணியிலிருந்து விடுவிக்கப்பட்டுள்ளார். மேலும், அவருக்கு பதிலாக பிரைடன் கார்ஸ் எனும் வீரர் சேர்க்கப்பட்டுளளார். தென்னாப்பிரிக்காவில் பிறந்தாலும், இங்கிலாந்து குடியுரிமையுடன் அந்நாட்டு அணிக்காக விளையாடி வரும் பிரைடன் கார்ஸ் மிடில் ஓவர்களில் சிறப்பாக பந்துவீசும் திறன் கொண்டவர் மற்றும் பேட்டிங்கிலும் சிறப்பாக செயல்படக்கூடிய ஆல்ரவுண்டர் ஆவார். மேலும், களத்தில் இவரது செயல்பாடு முன்னாள் வீரர் லியாம் பிளங்கெட்டை போலவே இருக்கும் என்பதால் இவரை ஜூனியர் லியாம் பிளங்கெட் என கிரிக்கெட்டர்கள் அழைக்கின்றனர்.