Sports Round Up : டேவிஸ் கோப்பையிலிருந்து போபண்ணா ஓய்வு; ஆஸ்திரேலிய தொடருக்கான இந்திய அணி அறிவிப்பு; டாப் விளையாட்டு செய்திகள்
டேவிஸ் கோப்பை டென்னிஸ் போட்டியில் 20 ஆண்டுகாலம் விளையாடி வரும் 43 வயதான மூத்த இந்திய வீரர் ரோஹன் போபண்ணா, அதிலிருந்து விடைபெறுவதாக அறிவித்துள்ளார். செர்பியா, பிரேசில் போன்ற சில உயர்மட்ட டென்னிஸ் வீரர்களை கொண்ட நாடுகளுடன் விளையாடியுள்ள ரோஹன் போபண்ணா இதுவரை 50 போட்டிகளில் பங்கேற்றுள்ளார். இந்நிலையில், லக்னோவில் சமீபத்தில் நடந்த மொரோக்கோவுடனான டேவிஸ் கோப்பை உலக குரூப் 2 ஆட்டத்துடன் டேவிஸ் கோப்பையில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், ஒவ்வொரு முறை இந்தியாவைப் பிரதிநிதித்துவப்படுத்திய போதெல்லாம் பெருமைக்குரிய தருணங்களாக இருந்துள்ளன எனத் தெரிவித்துள்ளார்.
ஆசிய விளையாட்டுப் போட்டியின் முதல் ஆட்டத்தில் சீனாவை எதிர்கொள்ளும் இந்திய கால்பந்து அணி
ஆசிய விளையாட்டுப் போட்டியில் இந்திய ஆடவர் கால்பந்து அணி செவ்வாய்க்கிழமை (செப்டம்பர் 19) அன்று தனது முதல் போட்டியில் சீனாவை எதிர்கொள்கிறது. இந்திய நேரப்படி போட்டி மாலை 5 மணிக்கு ஹுவாங்லாங் ஸ்போர்ட்ஸ் ஸ்டேடியத்தில் நடைபெற உள்ளது. ஆசிய விளையாட்டுப் போட்டியில் பங்கேற்கும் இந்திய கால்பந்து அணி கடைசி நேரத்தில் அறிவிக்கப்பட்ட நிலையில், எந்தவித பயிற்சியும் இல்லாமல் வலுவான சீனாவை எதிர்கொள்ள உள்ளது. இந்த தொடரில் இந்திய அணியின் கேப்டனாக சுனில் சேத்ரி செயல்பட உள்ளார். இதன் மூலம் ஆசிய விளையாட்டுப் போட்டிகளில் இரண்டு முறை இந்திய கால்பந்து அணியின் கேப்டனாக செயல்படும் மூன்றாவது வீரர் என்ற சாதனையை சுனில் சேத்ரி படைக்க உள்ளார்.
ஹாக்கி தரவரிசையில் மூன்றாவது இடத்திற்கு முன்னேறியது இந்திய ஹாக்கி அணி
சர்வதேச ஹாக்கி கூட்டமைப்பு திங்கட்கிழமை (செப்டம்பர் 18) வெளியிட்ட ஹாக்கி தரவரிசையில் ஆடவர் இந்திய ஹாக்கி அணி மூன்றாவது இடத்தை பிடித்துள்ளது. சமீபத்தில் சென்னையில் நடந்து முடிந்த ஆசிய சாம்பியன்ஸ் டிராபி போட்டியில் இந்திய ஹாக்கி அணி பட்டம் வென்றதன் மூலம் மூன்றாவது இடத்திற்கு இந்திய அணி முன்னேறியுள்ளது. மகளிர் ஹாக்கியைப் பொறுத்தவரை, இந்திய அணி தொடர்ந்து தனது ஏழாவது இடத்தை தக்கவைத்துள்ளது. இதற்கிடையே ஹாக்கியில் உலக அளவில் ஆதிக்கம் செலுத்தி வரும் நெதர்லாந்து ஆடவர் மற்றும் மகளிர் என இரண்டு பிரிவுகளிலும் உலக தரவரிசையில் முதலிடத்தில் உள்ளது.
அக்சர் படேல் மீண்டு வர எவ்வளவு நாள் ஆகும்? ரோஹித் ஷர்மா பதில்
ஆசிய கோப்பையில் வங்கதேசத்திற்கு எதிராக நடந்த சூப்பர் 4 சுற்று போட்டியில் இந்திய கிரிக்கெட் அணியின் இளம் வீரர் அக்சர் படேல் காயமடைந்து வெளியேறினார். அவரது காயம், ஆஸ்திரேலிய தொடர் மற்றும் ஒருநாள் உலகக்கோப்பையில் இந்தியாவுக்கு பின்னடைவை ஏற்படுத்தியுள்ளது. இந்நிலையில், அக்சர் படேல் தற்போது பெங்களூரில் உள்ள தேசிய கிரிக்கெட் அகாடமிக்கு சிகிச்சைக்காக சென்றுள்ள நிலையில், அவரது தயார் நிலை குறித்து கேப்டன் ரோஹித் ஷர்மாவிடம் கேள்வி எழுப்பபப்ட்டது. இந்நிலையில், அக்சர் படேல் குணமடைய மேலும் 10 நாட்கள் ஆகும் என என எதிர்பார்ப்பதாக ரோஹித் ஷர்மா தெரிவித்துள்ளார். ஒருவேளை அவர் குணமடைந்து வராத நிலையில், அவருக்கு பதிலாக அஸ்வின் ரவிச்சந்திரனை அணியில் சேர்க்க திட்டமிட்டுள்ளதாகத் தெரிகிறது.
ஆஸ்திரேலிய ஒருநாள் தொடருக்கான இந்திய அணி அறிவிப்பு
முதல் 2 போட்டிக்கான வீரர்கள் : கேஎல் ராகுல், ரவீந்திர ஜடேஜா, ருதுராஜ் கெய்க்வாட், ஷுப்மான் கில், ஷ்ரேயாஸ் ஐயர், சூர்யகுமார் யாதவ், திலக் வர்மா, இஷான் கிஷன், ஷர்துல் தாக்கூர், வாஷிங்டன் சுந்தர், ஆர்.அஷ்வின், ஜஸ்பிரித் பும்ரா, மொஹ்த்ரி . ஷமி, முகமது. சிராஜ், பிரசித் கிருஷ்ணா. 3வது போட்டி : ரோஹித் ஷர்மா, ஹர்திக் பாண்டியா, ஷுப்மன் கில், விராட் கோலி, ஷ்ரேயாஸ் ஐயர், சூர்யகுமார் யாதவ், கேஎல் ராகுல், இஷான் கிஷன், ரவீந்திர ஜடேஜா, ஷர்துல் தாக்கூர், அக்சர் படேல், வாஷிங்டன் சுந்தர், குல்தீப் யாதவ், ஆர் அஷ்வின், ஜஸ்பிரித் பும்ரா, முகமது. ஷமி, முகமது. சிராஜ்.