ஒருநாள் உலகக்கோப்பை: காயம் காரணமாக ஆஸ்திரேலிய வீரர் ஆஷ்டன் அகர் நீக்கம் எனத் தகவல்
ஐசிசி ஒருநாள் உலகக்கோப்பை 2023 தொடரில் ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணிக்கு பின்னடைவை ஏற்படுத்தும் வகையில், அந்த அணியின் ஆஷ்டன் அகர் வெளியேற்றப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. உலகக்கோப்பை போட்டி இந்தியாவில் நடக்க உள்ளதால் இதில் சுழற்பந்து வீச்சாளர்கள் பெரும் பங்காற்றுவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. பேட்டிங் மற்றும் சுழற்பந்து வீச்சாளர்கள் என இரண்டிலும் சிறந்து விளங்கும் வீரர்கள் இந்த தொடரில் ஒவ்வொரு அணிக்கும் முக்கியத்துவம் வாய்ந்தவர்களாக இருப்பார்கள். அந்த வகையில், சுழற்பந்து வீச்சு ஆல்ரவுண்டர் ஆஷ்டன் அகர் பத்து வருட அனுபவம் கொண்டவர் மற்றும் முழு ஃபார்மில் இருப்பதால், ஆஸ்திரேலிய அணி அவர் மீது அதிக நம்பிக்கை வைத்திருந்தது. ஆனால், சமீபத்தில் நடந்த தென்னாப்பிரிக்க தொடருக்கு முன்னதாக, பயிற்சியின்போது அவருக்கு காயம் ஏற்பட்டது.
ஆஷ்டன் அகருக்கு பதிலாக களமிறங்கும் வீரர் யார்?
தென்னாப்பிரிக்க தொடருக்கு முன் ஏற்பட்ட காயம் காரணமாக நாடு திரும்பிய அவருக்கு சமீபத்தில் குழந்தையும் பிறந்தது. இதனால், இந்தியாவுக்கு எதிரான ஒருநாள் கிரிக்கெட் தொடரில் பங்கேற்காத அவர் ஒருநாள் உலகக்கோப்பை தொடரில் ஆஸ்திரேலிய அணிக்காக விளையாடுவார் என எதிர்பார்க்கப்பட்டது. எனினும், அவர் இன்னும் காயத்திலிருந்து முழுமையாக குணமடையவில்லை என ஆஸ்திரேலிய கிரிக்கெட் வாரிய வட்டாரங்களில் கூறப்படுகிறது. இதனால், இந்தியாவுக்கு எதிரான மூன்றாவது ஒருநாள் போட்டியில் விளையாடிய தன்வீர் சங்கா, மார்னஸ் லாபுசாக்னே மற்றும் மேத்யூ ஷார்ட் ஆகியோரில் ஒருவருக்கு வாய்ப்பு வழங்கப்படும் எனத் தெரிகிறது. ஆஸ்திரேலிய அணியில் டிராவிஸ் ஹெட் மற்றும் நாதன் எல்லிஸ் ஆகியோரின் காயம் குறித்த அப்டேட் கிடைக்காத நிலையில், ஆஸ்திரேலியா தற்போது சிக்கலில் உள்ளது.