பரபரப்பு : கங்கை நதியில் பதக்கங்களை வீசி எறிய இந்திய மல்யுத்த வீரர்கள் முடிவு!
பாலியல் துன்புறுத்தல் குற்றச்சாட்டுகளுக்காக பிரிஜ் பூஷன் சிங்கிற்கு எதிராக போராட்டம் நடத்திய மல்யுத்த வீரர்கள், ஹரித்வாரில் உள்ள கங்கை நதியில் செவ்வாய்க்கிழமை (மே 30) பதக்கங்களை வீசுவோம் என்று தெரிவித்துள்ளனர். செவ்வாய்க்கிழமை மாலை 6 மணிக்கு ஹரித்வாரில் உள்ள கங்கை நதியில் பதக்கங்களை வீசிவிட்டு, டெல்லி இந்தியா கேட்டில் காலவரையற்ற உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபடப் போவதாக முன்னணி மல்யுத்த வீரர்கள் தெரிவித்துள்ளனர். இது தொடர்பாக அவர்கள் வெளியிட்டுள்ள அறிக்கையில், "இந்த பதக்கங்கள் எங்கள் உயிர்கள், எங்கள் ஆன்மாக்கள். இன்று அவற்றை கங்கையில் எறிந்துவிட்டு, அதன் பிறகு வாழ்வதற்கு எந்த காரணமும் இல்லாததால், இந்தியா கேட்டில் சாகும் வரை உண்ணாவிரதப் போராட்டம் நடத்துவோம்" என்று தெரிவித்துள்ளனர்.