INDvsSL : பாகிஸ்தானின் சாதனையை முறியடித்த இந்தியா; சச்சினின் சாதனையை முறியடித்த கோலி
ஒருநாள் உலகக்கோப்பை 2023 தொடரில் வியாழக்கிழமை (நவ.2) நடைபெற்ற இலங்கைக்கு எதிரான போட்டியில் முதலில் பேட்டிங் செய்த இந்திய கிரிக்கெட் அணி முதல் இன்னிங்சில் 50 ஓவர்கள் முடிவில் 8 விக்கெட் இழப்பிற்கு 357 ரன்கள் குவித்தது. இந்த போட்டியில், இந்திய தரப்பில் ஷுப்மன் கில் (92), விராட் கோலி (88) மற்றும் ஷ்ரேயாஸ் ஐயர் (82) அரைசதம் அடித்தனர். இந்நிலையில், உலகக்கோப்பை தொடரில் எந்தவொரு வீரரும் சதமடிக்காமல் ஒரு இன்னிங்சில் அதிக ரன் குவித்த அணி என்ற சாதனையை இதன் மூலம் இந்தியா படைத்துள்ளது. முன்னதாக, கடந்த 2019இல் பாகிஸ்தான் அணி இங்கிலாந்துக்கு எதிராக 348 ரன்கள் குவித்திருந்ததே அதிகபட்ச ரங்களாக இருந்த நிலையில், பாகிஸ்தானின் சாதனையை இந்தியா தற்போது முறியடித்துள்ளது.
ஒரு வருடத்தில் 1000+ ஸ்கோர்களை அதிகமுறை எடுத்த விராட் கோலி
இலங்கைக்கு எதிரான இந்த போட்டியில் 88 ரன்கள் எடுத்ததன் மூலம் இந்திய அணியின் நட்சத்திர வீரர் விராட் கோலி இந்த ஆண்டில் ஒருநாள் கிரிக்கெட்டில் 1,000 ரன்களை கடந்துள்ளார். இதன் மூலம், ஒரு காலண்டர் ஆண்டில் 1000க்கும் மேற்பட்ட ரன்களை அதிக முறை எடுத்திருந்த சச்சின் டெண்டுல்கரின் சாதனையை விராட் கோலி முறியடித்துள்ளார். சச்சின் டெண்டுல்கர் 1994, 1996, 1997, 1998, 2000, 2003 மற்றும் 2007 என 7 ஆண்டுகளில் 1000+ ஸ்கோரை எடுத்திருந்தார். விராட் கோலி 2011 முதல் 2014 வரையில் அனைத்து ஆண்டுகளிலும், 2017 முதல் 2019 வரை அனைத்து ஆண்டுகளிலும் மற்றும், தற்போது 2023 என மொத்தம் 8 முறை இந்த மைல்கல்லை எட்டியுள்ளார்.