100 ஆண்டு கால சுவைக்கு முற்றுப்புள்ளியா? லண்டனின் ஐகானிக் 'வீராசாமி' உணவகத்திற்கு வந்த சோதனை; முழு விவரம்
செய்தி முன்னோட்டம்
லண்டனின் ரீஜண்ட் தெருவில் 1926 ஆம் ஆண்டு தொடங்கப்பட்ட 'வீராசாமி', பிரிட்டனின் மிகப்பழமையான இந்திய உணவகமாகும். எட்வர்ட் பால்மர் என்ற ஆங்கிலோ-இந்திய தொழில்முனைவோரால் தொடங்கப்பட்ட இந்த உணவகம், கடந்த ஒரு நூற்றாண்டாக இந்திய கலாச்சாரம் மற்றும் உணவு முறையை லண்டன் மக்களுக்கு அறிமுகப்படுத்துவதில் முக்கியப் பங்காற்றி வருகிறது. உயர்தர உணவுக்காக 2016 இல் இதற்கு 'மிச்செலின் ஸ்டார்' அங்கீகாரம் வழங்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.
காரணம்
மூடல் அபாயத்திற்கான காரணம் என்ன?
இந்த வரலாற்றுச் சிறப்புமிக்க உணவகம் தற்போது தனது இருப்பைத் தக்கவைத்துக் கொள்ளப் போராடி வருகிறது. லண்டனில் உணவகம் அமைந்துள்ள கட்டிடத்தின் உரிமையாளரான 'கிரவுன் எஸ்டேட்', அதன் குத்தகை ஒப்பந்தத்தை புதுப்பிக்க மறுத்துவிட்டது. அந்த இடத்தைப் புனரமைத்து, மேலே உள்ள அலுவலகங்களுக்கான நுழைவாயிலை விரிவாக்கம் செய்ய அவர்கள் திட்டமிட்டுள்ளனர். இதனால், 100 ஆண்டுகளாக இயங்கி வரும் இந்த உணவகம் அங்கிருந்து வெளியேற்றப்படும் சூழல் உருவாகியுள்ளது.
கோரிக்கை
மன்னர் சார்லஸிடம் முன்வைக்கப்பட்ட கோரிக்கை
உணவகத்தைக் காப்பாற்ற அதன் இணை உரிமையாளர் ரஞ்சித் மத்ரானி மற்றும் ஆதரவாளர்கள் இணைந்து மன்னர் சார்லஸிற்கு ஒரு பொது மனுவை அனுப்பியுள்ளனர். இந்த உணவகம் பிரிட்டனின் சமையல் கலை பாரம்பரியத்தின் ஒரு பகுதி என்றும், அதை அழிவிலிருந்து காக்க வேண்டும் என்றும் அதில் கோரப்பட்டுள்ளது. ரேமண்ட் பிளாங்க் போன்ற உலகின் முன்னணி சமையல் கலைஞர்கள் உட்பட 20,000 க்கும் மேற்பட்டோர் இந்த மனுவில் கையெழுத்திட்டுள்ளனர். இருப்பினும், கிரவுன் எஸ்டேட்டின் வணிக ரீதியான முடிவுகளில் தலையிட மன்னருக்கு அதிகாரம் இல்லை என்று பக்கிங்ஹாம் அரண்மனை தெளிவுபடுத்தியுள்ளது.
கலாச்சாரம்
கலாச்சாரப் பிணைப்பின் சின்னம்
அரசியல் தலைவர்கள், அரச குடும்பத்தினர் மற்றும் உலகப் புகழ்பெற்ற நட்சத்திரங்கள் எனப் பலரையும் விருந்தினர்களாக உபசரித்த பெருமை இந்த உணவகத்திற்கு உண்டு. பஞ்சாப், காஷ்மீர் என இந்தியாவின் பல்வேறு மாநிலங்களின் உணவுகளை லண்டனுக்கு அறிமுகம் செய்த இந்த இடம், வெறும் உணவகம் மட்டுமல்ல. அது இந்தியா மற்றும் பிரிட்டன் இடையிலான கலாச்சாரப் பிணைப்பின் சின்னமாக பார்க்கப்படுகிறது.