ஆன்லைன் ரம்மியால் ரூ.19,984 கோடி பணமோசடி! கேம்ஸ்கிராஃப்ட் நிறுவனர்கள் 3 பேர் மீது அமலாக்கத்துறை குற்றப்பத்திரிகை தாக்கல்
செய்தி முன்னோட்டம்
பிரபல ஆன்லைன் கேமிங் நிறுவனமான கேம்ஸ்கிராஃப்ட் நிறுவனத்தின் நிறுவனர்களான விகாஸ் தனேஜா, பிரித்வி ராஜ் சிங் மற்றும் தீபக் சிங் அஹ்லாவத் ஆகிய 3 பேர் மீதும், சட்டவிரோத பணப்பரிவர்த்தனை தடைச் சட்டத்தின் (PMLA) கீழ் அமலாக்கத்துறை சனிக்கிழமை (ஜூலை 25) பெங்களூரு சிறப்பு நீதிமன்றத்தில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்துள்ளது. ஆன்லைன் ரம்மி விளையாட்டில் பங்கேற்ற பயனர்களை ஏமாற்றி, சட்டவிரோதமாக பணம் சம்பாதித்ததாக இவர்கள் மீது குற்றம் சாட்டப்பட்டுள்ளது.
குற்றச்சாட்டு
ரூ.19,984 கோடி குற்றப் பணம் ஈட்டியதாகக் குற்றச்சாட்டு
தெலுங்கானா மாநிலத்தில் பதிவு செய்யப்பட்ட பல காவல்துறை எஃப்ஐஆர்களின் அடிப்படையில் இந்த விசாரணையை அமலாக்கத்துறை தொடங்கியது.
ஆன்லைன் ரம்மி விளையாட்டுகளுக்கு அடிமையாகி நிதி இழப்பு மற்றும் மன உளைச்சலால் சிலர் தற்கொலை செய்து கொண்ட சம்பவங்களும் இதில் அடங்கும்.
2017-18 நிதி ஆண்டு முதல் 2025 ஆகஸ்ட் வரை, இந்த நிறுவனங்கள் கமிஷன் தொகையாக மட்டும் சுமார் ₹19,984 கோடி அளவுக்குக் குற்றப் பணம் ஈட்டியுள்ளதாக அமலாக்கத்துறை சுட்டிக்காட்டியுள்ளது.
உயர்நீதிமன்றம்
கர்நாடக உயர்நீதிமன்ற தீர்ப்பும் அமலாக்கத்துறையின் நகர்வும்
முன்னதாக மே மாதத்தில் இந்த 3 நிறுவனர்களையும் அமலாக்கத்துறை கைது செய்தது.
இருப்பினும், அவர்களின் கைது சட்டவிரோதமானது என கர்நாடக உயர் நீதிமன்றம் ஜூன் மாதத்தில் தீர்ப்பளித்தது.
இந்தத் தீர்ப்பை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்ய அமலாக்கத்துறை ஆயத்தமாகி வரும் நிலையில், குற்றப்பத்திரிகை தாக்கல் செய்ய எந்தத் தடையும் இல்லாததால் நீதிமன்றத்தில் இந்த சட்டப்பூர்வ நடவடிக்கையை மேற்கொண்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
சொத்துக்கள் முடக்கம்
₹2,401 கோடி மதிப்பிலான சொத்துக்கள் முடக்கம்
கேம்ஸ்கிராஃப்ட் நிறுவனத்தின் பயனர்களை மீண்டும் மீண்டும் பந்தயம் கட்டத் தூண்டும் அடிமையாக்கும் சூழல் காரணமாக இந்த மோசடி நடந்துள்ளதாக அமலாக்கத்துறை தெரிவித்துள்ளது.
இந்த வழக்கின் தொடர்ச்சியாக, வங்கி வைப்புத்தொகை, பரஸ்பர நிதிகள், பங்குகள், பண்ணை வீடு மற்றும் வணிக ரீதியிலான சொத்துக்கள் என இதுவரை மொத்தம் ₹2,401 கோடி மதிப்பிலான சொத்துக்களை அமலாக்கத்துறை முடக்கியுள்ளது.
மத்திய அரசு 2025 ஆகஸ்டில் ஆன்லைன் பணப் பந்தய விளையாட்டுகளுக்குத் தடை விதித்தது குறிப்பிடத்தக்கது.