INDvsPAK ஒருநாள் உலகக்கோப்பை : 191 ரன்களுக்கு சுருண்டது பாகிஸ்தான் அணி
சனிக்கிழமை (அக்டோபர் 14) நடைபெற்ற ஒருநாள் உலகக்கோப்பை 2023 தொடரின் லீக் போட்டியில் பாகிஸ்தான் முதல் இன்னிங்சில் 191 ரன்களுக்கு சுருண்டது. முன்னதாக, டாஸ் வென்ற இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டன் ரோஹித் ஷர்மா முதலில் பந்துவீச முடிவு செய்தார். இதைத் தொடர்ந்து பேட்டிங்கில் களமிறங்கிய பாகிஸ்தான் அணியின் தொடக்க ஆட்டக்காரர்கள் அப்துல்லா ஷபீக் மற்றும் இமாம்-உல்-ஹக் சிறப்பான தொடக்கத்தை அமைத்து முறையே 20 மற்றும் 36 ரன்கள் எடுத்தனர். அவர்களைத் தொடர்ந்து கேப்டன் பாபர் அசாம் மற்றும் விக்கெட் கீப்பர் முகமது ரிஸ்வான் நிலைத்து நின்று அணியின் ஸ்கோரை மளமளவென உயர்த்த ஆரம்பித்தனர்.
மிடில் ஓவர்களில் துவசம் செய்த இந்திய பந்துவீச்சாளர்கள்
பாகிஸ்தான் கிரிக்கெட் அணியின் கேப்டன் பாபர் அசாம் அரைசதம் எடுத்த நிலையில் 50 ரன்களில் முகமது சிராஜ் பந்துவீச்சில் அவுட்டானார். அவரைத் தொடர்ந்து முகமது ரிஸ்வானும் 49 ரன்களில் வெளியேற, அதன் பின் வந்த பாகிஸ்தான் பேட்டர்கள் அனைவரும் இந்திய பந்துவீச்சுக்கு திணற ஆரம்பித்தனர். இதன் மூலம் 155வது ரன்னுக்கு மூன்றாவது விக்கெட்டை இழந்த பாகிஸ்தான் அணி, 191 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டையும் இழந்தது. குறிப்பாக, கடைசி 37 ரன்களில் 8 விக்கெட்டுகளை இழந்தது. இந்திய அணியில் பந்துவீசியவர்களில் ஷர்துல் தாக்கூரைத் தவிர மற்ற அனைத்து வீரர்களும் தலா இரண்டு விக்கெட்டுகளை கைப்பற்றினர்.