
ஆசிய தடகள சாம்பியன்ஷிப் 2025: 36 ஆண்டுகளுக்குப் பிறகு தடை தாண்டும் ஓட்டத்தில் இந்தியாவிற்கு தங்கம்
செய்தி முன்னோட்டம்
தடகள ஆசிய சாம்பியன்ஷிப்பில் தடகள வீரர் அவினாஷ் 3000 மீட்டர் ஸ்டீப்பிள்சேஸ் போட்டியில் தங்கப் பதக்கம் வென்றதன் மூலம் இந்தியா ஒரு வரலாற்று மைல்கல்லை எட்டியது.
8 நிமிடங்கள் 20 வினாடிகளில் ஓடி, இந்தப் பிரிவில் இந்தியாவின் 36 ஆண்டுகால தங்கப் பதக்க வறட்சியை அவினாஷ் முடிவுக்குக் கொண்டு வந்தார்.
இதற்கு முன்னதாக இந்த பிரிவில் கடைசி தங்கப் பதக்கம் 1989 இல் பெறப்பட்டது.
தற்போது தென் கொரியாவின் குமியில் நடைபெற்று வரும் ஆசிய சாம்பியன்ஷிப் கடந்த மே 27 ஆம் தேதி தொடங்கியது.
மேலும் தமிழ்நாட்டைச் சேர்ந்த ஒன்பது விளையாட்டு வீரர்கள் உட்பட இந்தியா வலுவான அணியுடன் போட்டியில் பங்கேற்றுள்ளது.
பதக்கங்கள்
இந்தியாவின் பதக்கங்கள்
தமிழக வீரர்களைப் பொறுத்தவரை பிரவீன் சித்திரவேல் டிரிபிள் ஜம்ப் போட்டியில் வெள்ளிப் பதக்கம் வென்றார்.
கலப்பு 400 மீட்டர் ரிலேவில், இந்தியா தங்கப் பதக்கம் வென்றது, இதில் நான்கு ஓட்டப்பந்தய வீரர்களில் சந்தோஷ், விஷால் மற்றும் சுபா வெங்கடேசன் என மூன்று தமிழகத்தைச் சேர்ந்தவர்கள் ஆவர்.
இது தேசிய அளவில் தடகளத்தில் தமிழகத்தின் பங்களிப்பை மேலும் எடுத்துக்காட்டுகிறது.
இந்நிலையில், தடை தாண்டும் ஓட்டத்தில் அவினாஷ் தங்கம் வென்றதன் மூலம், இந்தியா 5 தங்கம், 6 வெள்ளி மற்றும் 3 வெண்கல பதக்கங்களுடன் பதக்கப் பட்டியலில் சீனாவுக்கு அடுத்தபடியாக இரண்டாவது இடத்தில் உள்ளது.
ஆசிய தடகள சாம்பியன்ஷிப் போட்டிகள் சனிக்கிழமை வரை தொடரும் என்பதால், இந்தியாவின் பதக்க எண்ணிக்கை மேலும் அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.