3,000 மீட்டர் ஸ்டீபிள் சேஸ் போட்டியில் தங்கம் வென்று அவினாஷ் சேபிள் சாதனை
சீனாவில் நடைபெற்று வரும் ஆசிய விளையாட்டுப் போட்டியில் ஞாயிற்றுக்கிழமை (அக்டோபர் 1) நடந்த 3,000 மீட்டர் ஆடவர் ஸ்டீபிள் சேஸ் போட்டியில் அவினாஷ் சேபிள் தங்கம் வென்றார். இதன் மூலம், 3,000 மீட்டர் ஸ்டீபிள் சேஸ் போட்டியில் தங்கப் பதக்கம் வென்ற முதல் இந்திய வீரர் என்ற சாதனை படைத்தார். அவினாஷ் 8.19.54 வினாடிகளில் கடந்து முதல் இடத்தைப் பிடித்து இந்தியாவுக்கு 12வது தங்கத்தை வென்றார். மேலும் ஆசிய விளையாட்டில் தடகளப் போட்டிகளிலும் இந்தியாவின் முதல் தங்கப் பதக்கம் இதுவாகும். இந்தியா தற்போது 12 தங்கம், 16 வெள்ளி, 16 வெண்கலத்துடன் பதக்கப் பட்டியலில் நான்காவது இடத்தில் உள்ளது.
அவினாஷ் சேபிள் பின்னணி
மகாராஷ்டிராவின் பீட் மாவட்டத்தில் உள்ள மண்ட்வா கிராமத்தில் செப்டம்பர் 13, 1994இல் அவினாஷ் முகுந்த் சேபிள் பிறந்தார். அவரது பெற்றோர் இருவரும் விவசாய பணியில் ஈடுபட்டு வருகின்றனர். அவர் தனது 12ஆம் வகுப்பை முடித்த பிறகு இந்திய இராணுவத்தில் சேர்ந்து, 5 மஹர் படைப்பிரிவின் ஒரு பகுதியாக இருந்தார். அவர் சியாச்சின், ராஜஸ்தான் மற்றும் சிக்கிம் ஆகிய இடங்களில் இந்திய ராணுவத்திற்காக பணிபுரிந்த அனுபவம் கொண்டுள்ளார். ஒரு எளிய குடும்ப பின்னணியில் இருந்து வந்த அவினாஷ், ராணுவத்தின் தடகளப் போட்டிகளில் பங்கேற்ற பிறகே, ஸ்டீபிள்சேஸ் பற்றி அறிந்து அதில் ஈடுபடத் தொடங்கினார். 2022 காமன்வெல்த் மற்றும் 2019 ஆசிய தடகள சாம்பியன்ஷிப்பில் வெள்ளி வென்ற அவினாஷுக்கு இது முதல் சர்வதேச தங்க பதக்கமாகும்.