அகமதாபாத்தில் 2026 காமன்வெல்த் விளையாட்டு போட்டிகளை நடத்த குஜராத் அரசு விருப்பம்
2026 ஆம் ஆண்டுக்கான காமன்வெல்த் விளையாட்டுப் போட்டியை, பட்ஜெட் பிரச்சினைகளைக் காரணம் காட்டி போட்டியை நடத்தும் முடிவிலிருந்து விலகுவதாக ஆஸ்திரேலியாவின் விக்டோரியா மாகாணம் செவ்வாயன்று (ஜூலை 18) அறிவித்தது. விக்டோரியா மாகாணத்தின் பிரீமியர் டான் ஆண்ட்ரூஸ், இந்த போட்டிகளுக்கு ஆரம்பத்தில் சுமார் ரூ.15,000 கோடி மதிப்பிடப்பட்ட நிலையில், தற்போது பட்ஜெட் மூன்று மடங்காக அதிகரித்துள்ளதால், போட்டியை நடத்தும் முடிவிலிருந்து பின்வாங்குவதாக அறிவித்தார். இந்த அறிவிப்பிற்கு பிறகு, ஆஸ்திரேலியாவில் உள்ள மற்ற மாகாணங்களும், இன்னும் மூன்று ஆண்டுகள் மட்டுமே இருப்பதால், போட்டியை தங்களால் நடத்த முடியாது என கைவிரித்துவிட்டன. இந்நிலையில், அகமதாபாத்தில் போட்டியை நடத்த குஜராத் அரசு விரும்புவதாக தகவல் வெளியாகியுள்ளது.
போட்டியை நடத்த குஜராத் அரசு விரும்புவதன் பின்னணி
முன்னதாக, குஜராத் அரசு அகமதாபாத்தில் 2030க்கான காமன்வெல்த் போட்டிகளை நடத்துவதற்கு ஏலம் எடுக்க தயாராகி வருகிறது. 2030 போட்டிக்கான உள்கட்டமைப்பு பணிகளை 2038க்குள் முடிக்க திட்டமிட்டிருந்தது. இந்நிலையில், தற்போது விக்டோரியா அரசு ஒதுங்கியுள்ளதால், 2026 காமன்வெல்த் போட்டிகளை அகமதாபாத்தில் நடத்த குஜராத் அரசு விருப்பம் தெரிவித்துள்ளது. இதற்கு வாய்ப்பு கிடைக்கும்பட்சத்தில், மத்திய அரசின் ஆதரவுடன் முன்கூட்டியே உள்கட்டமைப்பை உருவாக்கிட முடியும் என குஜராத் அரசு நம்புகிறது. மேலும், இதனுடன் சேர்த்து 2026ஆம் ஆண்டுக்குள் ஒலிம்பிக் போட்டியை நடத்துவதற்கான ஏலத்தில் பங்கேற்பதற்கு தேவையான அனைத்து வளர்ச்சிப் பணிகளையும் கூட முடித்து விடலாம் என திட்டமிட்டுள்ளது.