
கடல் நீரில் கரையும் நச்சுத்தன்மையற்ற பிளாஸ்டிக் உருவாக்கம்; ஜப்பான் விஞ்ஞானிகள் சாதனை
செய்தி முன்னோட்டம்
கடல் மாசுபாட்டைக் கட்டுப்படுத்தும் வகையில் ஜப்பானிய ஆராய்ச்சியாளர்கள் ஒரு புரட்சிகரமான கண்டுபிடிப்பை நிகழ்த்தி உள்ளனர்.
அதாவது, தீங்கு விளைவிக்கும் பிளாஸ்டிக் எச்சங்களை விட்டுவிடாமல் கடல் நீரில் பாதுகாப்பாக கரையும் ஒரு புதிய பிளாஸ்டிக் பொருளை அவர்கள் உருவாக்கி உள்ளனர்.
ரிகேன் எமர்ஜென்ட் மேட்டர் சயின்ஸ் மையம் மற்றும் டோக்கியோ பல்கலைக்கழக விஞ்ஞானிகளால் உருவாக்கப்பட்ட இந்த புதிய பிளாஸ்டிக், உப்புநீரில் வெளிப்படும் போது நச்சுத்தன்மையற்ற சேர்மங்களாக உடைக்கப்படும் அதே வேளையில், வழக்கமான பெட்ரோலியம் சார்ந்த பிளாஸ்டிக்கைப் போலவே நீடித்து உழைக்கும் தன்மையையும் கொண்டுள்ளது.
இந்த திட்டத்தை வழிநடத்தி விஞ்ஞானி டகுசோ ஐடாவின் பல தசாப்த கால ஆராய்ச்சியிலிருந்து இந்த கண்டுபிடிப்பு சாத்தியமாகி உள்ளது.
சூப்பர் மாலிகுலர் பாலிமர்
சுற்றுச்சூழலுக்கு தீங்கு விளைவிக்காத சூப்பர் மாலிகுலர் பாலிமர்
இயந்திரத்தனமாக வலுவானதாகவும் சுற்றுச்சூழலுக்கு பாதுகாப்பானதாகவும் இருக்கக்கூடிய ஒரு சூப்பர்மாலிகுலர் பாலிமரை உருவாக்குவதில் அவரது குழு கவனம் செலுத்தியது.
இதற்காக பல சேர்மங்களை பரிசோதித்த பிறகு, ஆராய்ச்சியாளர்கள் சோடியம் ஹெக்ஸாமெட்டாபாஸ்பேட், ஒரு பொதுவான உணவு சேர்க்கை மற்றும் உரங்களில் பயன்படுத்தப்படும் குவானிடினியம் அயன் அடிப்படையிலான மோனோமர்களின் கலவையை அடையாளம் கண்டனர்.
இதன் விளைவாக நைட்ரஜன் மற்றும் பாஸ்பரஸாக சிதைவடையும் ஒரு பிளாஸ்டிக் கண்டறியப்பட்டது.
இது தாவரங்களால் உறிஞ்சப்பட்டு நுண்ணுயிரிகளால் வளர்சிதை மாற்றப்படும் ஊட்டச்சத்துக்களாக மாற்றம் அடைகின்றன.
சிக்கல்
புதிய கண்டுபிடிப்பில் உள்ள சிக்கல்
குறிப்பிடத்தக்க வகையில், இந்தப் பொருள் தீயை எதிர்க்கும் தன்மை கொண்டது, மனிதர்களுக்கு பாதுகாப்பானது மற்றும் சிதைவின் போது கார்பன் டை ஆக்சைடை வெளியிடுவதில்லை.
இருப்பினும், அதிகப்படியான ஊட்டச்சத்துக்கள் கடலோர சுற்றுச்சூழல் அமைப்புகளுக்கு தீங்கு விளைவிக்கும் பாசிப் பூக்களைத் தூண்டக்கூடும் என்பதால், பெரிய அளவிலான பயன்பாட்டிற்கு சுற்றுச்சூழல் மேற்பார்வை தேவைப்படும் என்று ஐடா எச்சரித்தார்.
மைக்ரோபிளாஸ்டிக் மாசுபாடு குறித்த வளர்ந்து வரும் கவலைகளுக்கு மத்தியில் இந்த வளர்ச்சி ஏற்பட்டுள்ளது.
மைக்ரோபிளாஸ்டிக் நெருக்கடி நிலைகளை எட்டியுள்ளது என்று விஞ்ஞானிகள் எச்சரிக்கின்றனர்.
மனித உறுப்புகள் மற்றும் தொலைதூர இயற்கை சூழல்களில் மைக்ரோபிளாஸ்டிக் இப்போது கண்டறியப்பட்டுள்ளதால், நிலையான பிளாஸ்டிக் மாற்றுகளுக்கான தேவை முன்னெப்போதையும் விட மிகவும் அவசரமானதாக மாறியுள்ளது.