ககன்யான் திட்டம்: ஆளில்லா விமான சோதனைகளை நடத்த இருக்கும் இஸ்ரோ
இந்திய கடற்படையின் உதவியுடன் விண்வெளிக்கு மனிதர்களை அனுப்பும் ககன்யான் திட்டத்தில் க்ரூவ் எஸ்கேப் சிஸ்டத்தை(Crew Escape System) முதல் முறையாக இஸ்ரோ சோதனை செய்ய இருக்கிறது. 2026ஆம் ஆண்டு விண்வெளிக்கு மனிதர்களை அனுப்பும் திட்டமான ககன்யான் திட்டத்தின் பணிகள் தற்போது முழு வீச்சில் நடைபெற்று வருகிறது. இதன் ஒரு பகுதியாக விண்வெளிக்கு வீரர்கள் செல்லும்போதோ அல்லது திரும்பி வரும்போதோ விண்கலத்தில் ஏதேனும் பாதிப்பு ஏற்பட்டால் விண்வெளி வீரர்கள் பத்திரமாக தரையிறங்க வசதியாக அமைக்கப்பட்டுள்ள க்ரூவ் எஸ்கேப் சிஸ்டம் முறையை இஸ்ரோ சோதனை செய்ய இருப்பதாக தகவல் வெளியிட்டுள்ளது. முதலில் மனிதர்கள் இல்லாமல் இந்த சோதனையை செய்யும் இஸ்ரோ, பின்பு மனிதர்களுடனும் இந்த சோதனையை செய்து பார்க்க இருக்கிறது.
இந்த சோதனை எப்படி செய்யப்படுகிறது?
இந்த ஆளில்லா சோதனை முயற்சிக்கான விண்கலம் ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள சதீஷ் தவான் விண்வெளி ஆய்வு மையத்தில் இருந்து ஏவப்படும். ககன்யான் விண்கலத்தில் வீரர்கள் அமர்ந்து பயணிக்கும் பகுதியைப் போன்ற மாதிரி, பூமியிலிருந்து 17 கிலோமீட்டர் உயரத்தில் விண்கலத்தில் இருந்து பிரிக்கப்படும். பின்னர் தன்னிச்சையாக பாராசூட் திறந்து அந்த மாதிரி பத்திரமாக கடலில் தரையிறங்கும். வங்கக் கடலில் தரை இறங்கிய அந்த மாதிரியை, பிரத்தியேகமான கடற்படை கப்பல் மற்றும் டைவர்கள் உதவியுடன் மீட்கப்படும் என இஸ்ரோ தெரிவித்துள்ளது. ககன்யான் திட்டத்தின் பாதுகாப்பு காரணங்களுக்காக இச்சோதனை முக்கியமானது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.