புரட்டாசி ஸ்பெஷல்: உடுப்பி ஸ்டைல் சித்ரன்னா செய்முறை
உணவுக் குறிப்பு: உங்களில் பலரும் தேங்காய் சாதம் பிரியர்களாக இருக்கலாம். ஆனால் யாராவது உடுப்பி ஸ்டைல் தேங்காய் சாதம் சாப்பிட்டதுண்டா? இது கர்நாடகாவில் மிகவும் பிரபலமான உணவாகும். கர்நாடகாவில் இது 'உடுப்பி ஸ்டைல் சித்ரன்னா' என்று அழைப்பார்கள். இது தமிழ்நாட்டில் செய்வது போல, தேங்காய் துருவலை சாதத்துடன் கலப்பது போன்றது அல்ல. இது சற்றே மாறுதலானது. இதை மசாலா சாதம் என்றும் அழைப்பார்கள். இந்த புரட்டாசி ஸ்பெஷல் மாதத்தில், கர்நாடகாவின் ஸ்பெஷல் உணவான சித்ரன்னா செய்வது எப்படி என்பதை பாப்போம்.
தேவையான பொருட்கள்
2 கப் சாதம் 1 கப் துருவிய தேங்காய் 2 பச்சை மிளகாய் 2 மேசை கரண்டி எண்ணெய் 2 தேக்கரண்டி கடுகு 1 தேக்கரண்டி உளுந்து 2 கைப்பிடியளவு வறுத்த வேர்க்கடலை(நிலக்கடலை) தேவைக்கேற்ப உப்பு 3 பட்டை 3 கிராம்பு 5 - பல் பூண்டு இஞ்சி ஒரு இன்ச் அளவு, தோல் நீக்கி நறுக்கியது 1 /4 தேக்கரண்டி மஞ்சள் 2 சிட்டிகை சீரகம் 1 தேக்கரண்டி கடலைப்பருப்பு 2 வெங்காயம் (பொடியாக நறுக்கியது) கைப்பிடி அளவிற்கு கறிவேப்பிலை, நறுக்கிய கொத்தமல்லி தழைகள்
செய்முறை
ஒரு மிக்சியில், தேங்காய், பட்டை, கிராம்பு, இஞ்சி, பூண்டு, பச்சை மிளகாய் மற்றும் மஞ்சள் சேர்த்து, சட்னி பதத்திற்கு அரைத்துக்கொள்ளவும். பின்னர் ஒரு பெரிய கடாயில், எண்ணெய் சேர்த்து, கடுகு, உளுந்து, கறிவேப்பிலை, நறுக்கிய வெங்காயம் சேர்த்து வதக்கவும். வெங்காயம் பொன்னிறம் ஆனபின்னர், அதனுடன் மிக்சியில் அரைத்த தேங்காய் கலவையை சேர்த்து, மிதமான தீயில் 4-5 நிமிடங்கள் கொதிக்க விடவும். இந்த கலவையின் பச்சை வாசனை போனதும், அனலை நன்றாக குறைத்து, ஆறவைத்திருந்த சாதத்தையும், தேவையான உப்பையும் அதனுடன் கலந்து 2-3 நிமிடங்கள் மூடி வைத்து வேக விடவும். இப்போது வறுத்த வேர்க்கடலை மற்றும் கொத்தமல்லி இழைகளை தூவி பரிமாறவும். சுவையான மசாலா தேங்காய் சாதம் அல்லது உடுப்பி ஸ்டைல் சித்ரன்னா தயார்!