நலமடைந்து வீடு திரும்பினார் விஜயகாந்த் - மியாட் மருத்துவமனை அறிக்கை வெளியீடு
தேமுதிக கட்சி தலைவரும், சினிமா நடிகருமான விஜயகாந்த் கடந்த சில ஆண்டுகளாகவே உடல்நிலை பாதிக்கப்பட்டு, தனது பொது வாழ்க்கையில் இருந்து சற்று ஒதுங்கி வீட்டிலேயே ஓய்வு எடுத்து வருகிறார். இந்நிலையில், கடந்த 18ம்.,தேதி சென்னை நந்தம்பாக்கத்திலுள்ள மியாட் மருத்துவமனையில், தொடர் இருமல், மார்புசளி, காய்ச்சல், உடல் சோர்வு உள்ளிட்ட பாதிப்புகள் காரணமாக அனுமதிக்கப்பட்டார். இதனால் அவருக்கு செயற்கை சுவாசம் அளிக்கப்பட்டு சிகிச்சையளிக்கப்படுவதாக தகவல்கள் வெளியானது. இதனையடுத்து அவர் உடல்நிலை குறித்து பல்வேறு வதந்திகள் பரவிய நிலையில், அவரது உடல்நிலையில் முன்னேற்றம் உள்ளது, ஓரிரு நாட்களில் குணமடைந்து வீடு திரும்புவார் என்று தெரிவிக்கப்பட்டது. ஆனால் இதனிடையே, மீண்டும் மியாட் மருத்துவமனை சார்பில் கடந்த 29ம் தேதி ஒரு அறிக்கை வெளியாகி மக்களை அதிர்ச்சியடைய செய்தது.
ஸ்வாசக்கோளாறுக்கு சிகிச்சை பெற்றுவந்த விஜயகாந்த்
அந்த அறிக்கையில், 'விஜயகாந்த் உடல்நிலை சீராக இல்லை. அவருக்கு நுரையீரல் சிகிச்சைக்கான உதவி தேவைப்படுகிறது' என்றும், 'அவருக்கு இன்னும் 14 நாட்களுக்கு மருத்துவமனையின் தொடர் சிகிச்சை தேவைப்படுகிறது' என்றும் கூறப்பட்டிருந்தது. மேலும் அவருக்குள்ள ஸ்வாசக்கோளாறுக்கு நிவாரணம் அளிக்க வேண்டுமெனில் அவருக்கு 'டிரக்கியாஸ்டமி' சிகிச்சையளிக்க வேண்டும் என்று மருத்துவர்கள் ஆலோசனை செய்து வருவதாகவும் கூறப்பட்டது. இந்நிலையில், மியாட் மருத்துவமனை சார்பில் இன்று(டிச.,11) ஓர் அறிக்கையினை வெளியிட்டுள்ளது. அதில், 'மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த விஜயகாந்த் பூரண குணமடைந்து வீடு திரும்பினார்' என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இது அவரது ரசிகர்கள் மற்றும் ஆதரவாளர்கள் மத்தியில் சந்தோஷத்தை ஏற்படுத்தியுள்ளது குறிப்பிடத்தக்கது.