திடீர் உடல்நலக்குறைவு காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார் அமைச்சர் துரைமுருகன்
திமுக'வின் பொதுச்செயலாளரும், தமிழக நீர்வளத்துறை அமைச்சருமான துரைமுருகன் கடந்த சில நாட்களாக சளி, இரும்பல், லேசான காய்ச்சல் உள்ளிட்ட பாதிப்புகளால் அவதிப்பட்டு வந்துள்ளார். இந்நிலையில் நேற்று(டிச.,18) இரவு இவர் திடீரென சென்னை கிரீம்ஸ் சாலையில் உள்ள அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார் என்று கூறப்படுகிறது. அங்கு அவரை பரிசோதித்த மருத்துவர்கள் சிகிச்சையளித்து வருவதாக தகவல்கள் தெரிவிக்கிறது. சிகிச்சை முடிந்து அமைச்சர் துரைமுருகன் இன்று மாலை அல்லது நாளை(டிச.,20) காலை வீடு திரும்புவார் என்றும் கூறப்பட்டுள்ளது. அண்மையில் சென்னையில் மிக்ஜாம் புயலால் ஏற்பட்ட மழை வெள்ளதினையடுத்து, பல்வேறு நீர்நிலைகளை நேரில் சென்று இவர் ஆய்வு மேற்கொண்டிருந்தார். எனவே அலைச்சல் காரணமாக சளி போன்ற தொந்தரவுகள் ஏற்பட்டிருக்கலாம் என்பதால் ஒவ்வாமைக்கான மருந்துகளும் இவருக்கு கொடுக்கப்படுகிறது குறிப்பிடத்தக்கது.