வாக்கு சாவடிக்குள் 'செல்பி' எடுத்தால் 3 மாத சிறை: தேர்தல் ஆணையம் கடும் எச்சரிக்கை
செய்தி முன்னோட்டம்
தமிழகச் சட்டமன்ற தேர்தல் நாளை (ஏப்ரல் 23) நடைபெறவுள்ள நிலையில், வாக்காளர்கள் குறிப்பாக இளைஞர்களுக்கு இந்தியத் தேர்தல் ஆணையம் மிக முக்கியமான எச்சரிக்கை ஒன்றை விடுத்துள்ளது. வாக்குச்சாவடிக்குள் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரத்தை (EVM) புகைப்படம் எடுப்பது அல்லது காணொலி பதிவு செய்வது தண்டனைக்குரிய குற்றமாகும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. தமிழகம் முழுவதும் நாளை ஒரே கட்டமாக வாக்குப்பதிவு நடைபெறவுள்ள நிலையில், மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களை பலத்த பாதுகாப்புடன் வாக்குச்சாவடிகளுக்கு அனுப்பும் பணியில் தேர்தல் அதிகாரிகள் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர். வாக்களித்த பிறகு, வாக்குச்சாவடிக்கு வெளியே வந்து மை இடைப்பட்ட விரலை புகைப்படம் எடுத்து பகிர்வதில் தடையுமில்லை, அதுவே பாதுகாப்பானது என அதிகாரிகள் அறிவுறுத்தியுள்ளனர்.
தகுதி நீக்க நடவடிக்கை
3 மாத சிறைத்தண்டனை எச்சரிக்கை
இன்றைய இன்ஸ்டாகிராம் மற்றும் சமூக ஊடகத் தலைமுறையினர், தாங்கள் யாருக்கு வாக்களித்தோம் என்பதைப் புகைப்படம் எடுத்துப் பகிர்வதை வழக்கமாகக் கொண்டுள்ளனர். இதனைத் தடுக்கத் தேர்தல் ஆணையம் கீழ்க்கண்ட நடவடிக்கைகளை அறிவித்துள்ளது. வாக்குப்பதிவின் ரகசியத்தன்மையை மீறுபவர்களுக்கு 1951-ஆம் ஆண்டின் மக்கள் பிரதிநிதித்துவச் சட்டத்தின் பிரிவு 128-இன் கீழ் 3 மாதங்கள் வரை சிறைத் தண்டனை அல்லது அபராதம் விதிக்கப்படலாம். வாக்குச் சாவடிக்குள் அலைபேசி அல்லது இதர மின்னணு சாதனங்களைப் பயன்படுத்தினால், அவை தேர்தல் முகவர்களால் பறிமுதல் செய்யப்படலாம். வாக்குப்பதிவு ரகசியத்தைப் பாதுகாப்பது ஜனநாயகத்தின் அடிப்படை அம்சமாகும். இதனை மீறும் வாக்காளர்களைத் தகுதி நீக்கம் செய்யப் பரிந்துரைக்கும் அதிகாரம் தேர்தல் ஆணையத்திற்கு உள்ளது. இது எதிர்கால தேர்தல்களில் அவர்கள் வாக்களிக்கும் உரிமையை நேரடியாகப் பாதிக்கக்கூடும்.
தமிழகத்தில் இளைஞர்களின் முனைப்பு
முதல்முறை வாக்காளர்கள்
புதுச்சேரி மற்றும் கேரளாவில் அண்மையில் நடந்து முடிந்த தேர்தல்களில் இளைஞர்களின் பங்களிப்பால் வாக்குப்பதிவு சதவீதம் வரலாறு காணாத வகையில் அதிகரித்தது. தமிழகத்தில் நாளை நடைபெறவுள்ள தேர்தலில் சுமார் 14.59 லட்சம் முதல்முறை வாக்காளர்கள் தங்களது ஜனநாயகக் கடமையை ஆற்ற உள்ளனர். தமிழகத்திலும் இளைஞர்கள் அதிக ஆர்வம் காட்டி வருவதால், இந்த முறை வாக்குப்பதிவு சதவீதம் புதிய சாதனை படைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.