தவறான நோக்கத்துடன் தகவல் தேடுபவர்களை கண்டறிய கூகுள், யூடியூப் நிறுவனங்களின் உதவியை நாடிய சைபர் கிரைம்
கேரளாவில் நடந்த குண்டு வெடிப்பு சம்பவத்தின் எதிரொலியாக, இணையத்தில் தவறான நோக்கத்துடன் தகவல் தேடுபவர்களை கண்டறிய கூகுள், யூடியூப் நிறுவனங்களின் உதவியை சைபர் கிரைம் போலீசார் நாடி உள்ளனர். சமூக வலைதளமான ட்விட்டர், பேஸ்புக் போன்றவற்றில் வெறுப்புக் கருத்துக்கள், அவதூறு பதிவிடுவோரை சைபர் கிரைம் போலீசார் கண்டறிந்து உடனடி நடவடிக்கை எடுத்து வருகின்றனர். ஆனால், ஒருவர் கூகுள் மற்றும் யூடியூப்களில் எதை தேடுகிறார் என்பது குறித்த தகவல்களை கண்டறிய, சைபர் கிரைம் போலீசாருக்கு இயலாத காரியமாகவே இருந்து வருகிறது. இதை தடுக்க, துப்பாக்கி தயாரித்தல், வெடிகுண்டு தயாரித்தல் குறித்து யாராவது இணையத்தில் தேடி உள்ளார்களா என்ற தகவல்களை, அந்நிறுவனங்கள் இடம் தமிழ்நாடு சைபர் கிரைம் போலீசார் கேட்டுள்ளனர்.
முன்னெச்சரிக்கை நடவடிக்கை மேற்கொண்ட சைபர் கிரைம் போலீசார்
கடந்த அக்டோபர் 27ஆம் தேதி, கேரள மாநிலம் எர்ணாகுளத்தில் கிறிஸ்தவ மத வழிபாட்டு கூட்டத்தில் குண்டு வெடித்தது. இதில் மூன்று பேர் உயிரிழந்த நிலையில், 50க்கும் மேற்பட்டோர் காயம் அடைந்தனர். இதில் கைதான டோமினிக் என்பவர், தான் யூடியூப் பார்த்து வெடிகுண்டு செய்ய கற்றுக்கொண்டதாக தெரிவித்திருந்தார். கேரள குண்டுவெடிப்புக்கு பின் உஷாரான தமிழ்நாடு காவல்துறையினர், இது போன்ற சம்பவங்கள் தமிழ்நாட்டில் நடக்காத வண்ணம் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்து வருகின்றனர். அதன் ஒரு பகுதியாக, கூகுள் மற்றும் யூடியூப் நிறுவனங்களிடம் தகவல்களைப் பெற்று, அசம்பாவித செயல்களில் ஈடுபடும் நபர்களை கண்காணிக்க சைபர் கிரைம் போலீசார் முடிவு செய்துள்ளனர்.