
தமிழகத்தில் 11 புதிய அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகள் திறந்து வைத்த முதல்வர்: எங்கே தெரியுமா?
செய்தி முன்னோட்டம்
தமிழகத்தில் உயர்கல்வியை வலுப்படுத்தும் வகையில், 2025-26 ஆம் கல்வியாண்டு முதல் செயல்படும் 11 புதிய அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளை முதல்வர் மு.க.ஸ்டாலின் இன்று (மே 26) தலைமைச் செயலகத்தில் காணொலி காட்சி மூலம் தொடங்கி வைத்தார்.
இந்த புதிய கல்லூரிகள் கடலூர் (பண்ருட்டி), நீலகிரி (குன்னூர்), திண்டுக்கல் (நத்தம்), சென்னை (ஆலந்தூர்), விழுப்புரம் (விக்கிரவாண்டி), செங்கல்பட்டு (செய்யூர்), சிவகங்கை (மானாமதுரை), திருவாரூர் (முத்துப்பேட்டை), தஞ்சாவூர் (திருவிடைமருதூர்), பெரம்பலூர் (கொளக்காநத்தம்), தூத்துக்குடி (ஒட்டப்பிடாரம்) ஆகிய 11 இடங்களில் நிறுவப்படுகின்றன.
நிதி
உயர் கல்வி வசதிக்கு ₹25.27 கோடி நிதி ஒதுக்கிய தமிழக அரசு
ஒவ்வொரு கல்லூரியும் தலா 5 பாடப்பிரிவுகளுடன் தொடங்கப்படுவதாகவும், ஒவ்வொரு ஆண்டும் 3050 மாணவர்கள், மூன்று ஆண்டுகளுக்குள் 9150 மாணவர்கள் பயனடைவார்கள் என அரசு தகவல் வெளியிட்டுள்ளது.
இந்த திட்டத்துக்காக ஒவ்வொரு கல்லூரிக்கும் 12 உதவிப் பேராசிரியர்கள் மற்றும் 14 ஆசிரியர் அல்லாத பணியிடங்கள் உருவாக்கப்பட்டுள்ளன.
மொத்தமாக 132 ஆசிரியர் பணியிடங்கள் மற்றும் 154 பணியாளர் இடங்களுக்கு தமிழக அரசு அனுமதி வழங்கியுள்ளது.
இதற்காக ₹25.27 கோடி நிதி ஒதுக்கப்பட்டுள்ளது.
இந்த புதிய கல்லூரிகள் தொடங்கப்பட்டதுடன், தமிழகத்தில் செயல்பட்டு வரும் மொத்த அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகள் எண்ணிக்கை 176 ஆக உயர்ந்துள்ளது.