தமிழகத்தில் இன்று முதல் வெப்பநிலை அதிகரிக்கும்: வானிலை இயக்குனர் தகவல்
செய்தி முன்னோட்டம்
தமிழகம், புதுச்சேரி மற்றும் காரைக்காலில் ஒரு சில இடங்களில், இன்று முதல் அடுத்த நான்கு நாட்களுக்கு, 3 டிகிரி செல்சியஸ் வரை வெப்பநிலை அதிகரிக்கும் வாய்ப்பு உள்ளது என்று வானிலை ஆய்வு மைய இயக்குனர் தெரிவித்துள்ளார்.
"பூமத்திய ரேகையை ஒட்டிய மேற்கு இந்திய பெருங்கடல் மற்றும் அதனைச் சுற்றிய மாலத்தீவு முதல் தென்மேற்கு வங்கக்கடல் வரை ஒரு வளி மண்டல கீழடுக்கு சுழற்சி செயல்பட்டு உள்ளது. குமரிக்கடல் பகுதிகளின் மேல், ஒரு வளி மண்டல மேலடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதன் காரணமாக, தமிழகம், புதுச்சேரி, காரைக்காலில் இன்று லேசான முதல் மிதமான மழை பெய்ய வாய்ப்பு உள்ளது. மார்ச் 17ஆம் தேதி வரை இதே நிலை தொடரும்" என்றும் அவர் கூறினார்.
மழை
தமிழகத்தில் மழை நிலவரம்
அவர் மேலும் கூறுகையில், "நேற்று காலை வரையிலான 24 மணி நேரத்தில், தமிழகத்தின் பெரும்பாலான பகுதிகளில் பரவலாக மழை பெய்தது. தமிழகத்தில் அதிகபட்சமாக கள்ளக்குறிச்சி மாவட்டம், தியாகதுருகம் பகுதியில் 16 செ.மீ. மழை பதிவாகியுள்ளது. அதன் பின்பு, கள்ளக்குறிச்சி 15 செ.மீ., கோமுகி அணை 12 செ.மீ., ராமநாதபுரம், கள்ளக்குறிச்சி கலயநல்லூர் தலா 11 செ.மீ., கள்ளக்குறிச்சி மாவட்டம், சூலாங்குறிச்சி 10 செ.மீ., கள்ளக்குறிச்சி மாவட்டம் விருகாவூர், திருவாரூர், திருநெல்வேலி மாவட்டம் ஊத்து பகுதியில் தலா 9 செ.மீ. மழை பதிவாகியுள்ளது".
"சென்னையில், வானம் ஓரளவு மேகமூட்டமாக காணப்படும்; சில இடங்களில் இடி, மின்னலுடன் லேசான மழை பெய்ய வாய்ப்பு உள்ளது. காலையில் லேசான பனி மூட்டமும் காணப்படும்." எனக்கூறினார்.