இஸ்ரேலிலிருந்து தாயகம் திரும்பிய தமிழர்கள் இன்று மதியம் சொந்த ஊர் திரும்ப ஏற்பாடு
போரினால் பாதிக்கப்பட்ட இஸ்ரேலிலிருந்து, இந்தியர்களை மீட்கும் நடவடிக்கையை நேற்று தொடங்கியது மத்திய அரசு. 'ஆபரேஷன் அஜய்' என பெயரிடப்பட்டுள்ள இந்த வெளியேற்ற நடவடிக்கையின் முதற்கட்டமாக, நேற்று முதல் விமானம் இஸ்ரேலுக்கு சென்றது. அதன் மூலம், இன்று அதிகாலை 212 இந்தியர்கள் டெல்லி விமான நிலையம் வந்தடைந்தனர். இவர்களை மத்திய இணை அமைச்சர் ராஜீவ் சந்திரசேகர் வரவேற்றார். பத்திரமாக தாயகம் திரும்பிய இந்தியர்களில், 21 பேர் தமிழர்கள். இவர்களில், 14 பேர் பகல் 12:50மணிக்கு சென்னை உள்நாட்டு விமான நிலையத்திற்கும், 7 பேர் மதியம் 2:45மணிக்கு கோவை விமான நிலையத்திற்கும் வருகின்றனர் என செய்திகள் தெரிவிக்கின்றன. இஸ்ரேலில் போர் மூண்டதையடுத்து, கடந்த அக்டோபர் 7ஆம் தேதி இந்தியாவிலிருந்து இஸ்ரேலுக்கு விமான சேவை நிறுத்தப்பட்டது குறிப்பிடத்தக்கது.