'ஆபரேஷன் அஜய்'- இஸ்ரேலில் இருந்து 212 இந்தியர்கள் டெல்லி வந்தடைந்தனர்
போரால் பாதிக்கப்பட்டுள்ள இஸ்ரேலில் இருந்து 212 இந்தியர்களுடன் முதல் விமானம் இன்று டெல்லி வந்தடைந்தது. கடந்த சனிக்கிழமை அன்று பாலஸ்தீனிய ஆயுதக் குழுவான ஹமாஸ், இஸ்ரேல் மீது நடத்திய திடீர் ஏவுகணை தாக்குதலால் போர் மூண்டது. ஏழாவது நாளை போர் எட்டியுள்ள நிலையில், இஸ்ரேலில் உள்ள 18,000க்கும் மேற்பட்ட இந்தியர்களை, இந்தியா அழைத்து வர மத்திய அரசு 'ஆபரேஷன் அஜயை' தொடங்கியது. இந்த ஆபரேஷனின் முதல் பகுதியாக, முதலில் பதிவு செய்பவர்களுக்கு முன்னுரிமை என்ற அடிப்படையில், இஸ்ரேலில் இருந்து 212 பேர் விமானம் மூலம் டெல்லி அழைத்து வரப்பட்டனர். இஸ்ரேலில் போர் மூண்டதை அடுத்து கடந்த அக்டோபர் 7 ஆம் தேதி இந்தியாவிலிருந்து இஸ்ரேலுக்கு விமான சேவை நிறுத்தப்பட்டது குறிப்பிடத்தக்கது.