
கர்ப்பிணி பெண்கள் முகக்கவசம் அணிய வேண்டும்; தமிழக சுகாதாரத்துறை அறிவுறுத்தல்
செய்தி முன்னோட்டம்
இந்தியா முழுவதும் கொரோனா பாதிப்புகள் படிப்படியாக அதிகரித்து வருவதால், தமிழ்நாடு அரசின் சுகாதாரத் துறை முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை செயல்படுத்தத் தொடங்கியுள்ளது.
குறிப்பாக கர்ப்பிணிப் பெண்கள் போன்ற பாதிக்கப்படக்கூடிய குழுக்களை மையமாகக் கொண்டு நடவடிக்கை தீவிரப்படுத்தப்பட்டு உள்ளது.
வெள்ளிக்கிழமை (ஜூன் 6) நிலவரப்படி, இந்தியாவில் 5,364 புதிய கொரோனா பாதிப்புகள் பதிவாகியுள்ளன. அதே நேரம் 4,724 பேர் குணமடைந்துள்ளனர்.
கேரளா 1,679 பாதிப்புகளுடன் முதலிடத்தில் உள்ளது. அதைத் தொடர்ந்து குஜராத் (615), மேற்கு வங்கம் (596), டெல்லி (562), மற்றும் மகாராஷ்டிரா (548) ஆகிய மாநிலங்கள் உள்ளன.
தமிழ்நாட்டில் 221 பேருக்கு ஒட்டுமொத்தமாக பாதிப்பு ஏற்பட்டுள்ளன. இதில் கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் 8 பேருக்கு புதிதாக பாதிப்பு ஏற்பட்டுள்ளன.
தீவிரத்தன்மை
வைரஸ் தீவிரத்தன்மை கொண்டதல்ல
தற்போது பரவி வரும் கொரோனா வைரஸ் மாறுபாடு அதிக பாதிப்பை ஏற்படுத்தும் தீவிரத்தன்மை கொண்டதல்ல என்பதை சுகாதார அதிகாரிகள் உறுதிப்படுத்தியுள்ளனர்.
தமிழ்நாட்டில் பாதிக்கப்பட்ட நபர்களிடமிருந்து மாதிரிகள் புனேவின் வைராலஜி நிறுவனத்திற்கு அனுப்பப்பட்டன.
அங்கு சிலரு ஓமிக்ரான் மாறுபாடு இருப்பது கண்டறியப்பட்டதாக சுகாதார அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்தார்.
தமிழ்நாட்டில் நிலைமை கட்டுக்குள் இருந்தாலும், சுகாதாரத் துறை பாதுகாப்பு நெறிமுறைகளை மீண்டும் வலியுறுத்தியுள்ளது.
முதியவர்கள் மற்றும் நோய் எதிர்ப்பு சக்தி குறைவாக உள்ளவர்கள் பொது இடங்களில் முககவசங்களை அணிய அறிவுறுத்தப்படுகிறார்கள்.
இந்நிலையில், தற்போது வெளியிட்டுள்ள புதிய ஆலோசனையில், கர்ப்பிணிப் பெண்கள் எச்சரிக்கையாக இருக்குமாறு வலியுறுத்தப்பட்டுள்ளது.
மருத்துவமனை
முன்கூட்டியே மருத்துவ உதவி
கர்ப்பிணி பெண்கள் காய்ச்சல், இருமல் அல்லது உடல் வலி இருந்தால் முன்கூட்டியே மருத்துவ உதவியை நாட வேண்டும் மற்றும் குறிப்பிட்ட தேதிக்கு முன்பே மருத்துவமனைகளுக்குச் செல்வதைக் கருத்தில் கொள்ள வேண்டும்.
நெரிசல் மற்றும் அதிக கூட்டம் உள்ள பகுதிகளை தற்போதைக்கு கர்ப்பிணிகள் தவிர்க்கவும் இந்த ஆலோசனை பரிந்துரைக்கிறது. முககவசங்கள் தற்போது கட்டாயமில்லை என்றாலும், தடுப்பு நடவடிக்கையாக அதை பயன்படுத்த ஊக்குவிக்கப்படுகிறது.
வளர்ந்து வரும் கொரோனா பாதிப்புகளுக்கு மத்தியில் அதிக ஆபத்துள்ள மக்களின் பாதுகாப்பை உறுதி செய்வதை இந்த நடவடிக்கைகள் நோக்கமாகக் கொண்டுள்ளன.