ஆளுநரின் முடிவுக்கு எதிராக இன்று கூடுகிறது தமிழக சட்டப்பேரவையின் சிறப்பு கூட்டம்
தமிழக சட்டசபையின் அவசர கூட்டத்தொடர் இன்று காலை 10 மணிக்கு கூடுகிறது. தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி அரசு அனுப்பிய மசோதாக்களுக்கு ஒப்புதல் அளிக்காமல் திருப்பி அனுப்பியதை அடுத்து இந்த கூட்டம் கூட்டப்பட்டுள்ளது. திருவண்ணாமலையில் வைத்து செய்தியாளர்களிடம் பேசிய தமிழக சபாநாயகர் எம்.அப்பாவு, சட்டப்பேரவை சிறப்புக் கூட்டம் இன்று நடைபெறும் என்று தெரிவித்தார். ஏற்கனவே, தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி மசோதாக்களுக்கு ஒப்புதல் அளிக்க மறுக்கிறார் என்ற குற்றச்சாட்டு இருந்து வந்தது. இது தொடர்பாக தமிழக அரசு, உச்ச நீதிமன்றத்திலும் மனு தாக்கல் செய்துள்ளது. ஆளுநர் கையெழுத்திடாததால், நான்கு அதிகாரப்பூர்வ உத்தரவுகள் மற்றும் குறைந்தது 12 மசோதாக்கள் நிலுவையில் உள்ளன. 54 கைதிகளை முன்கூட்டியே விடுதலை செய்வது தொடர்பான ஆவணங்களும் நிலுவையில் உள்ளதாக கூறப்படுகிறது.