செந்தில் பாலாஜி ஜாமீன் மனுவை வாபஸ் பெற உச்சநீதிமன்றம் அனுமதி
சட்ட விரோத பண பரிவர்த்தனை செய்த வழக்கில் செந்தில் பாலாஜி அமலாக்கத்துறையால் கடந்த ஜூன் 14ம் தேதி கைது செய்யப்பட்டார். தற்போது புழல் சிறையில் அடைக்கப்பட்ட இவர் மருத்துவ காரணங்களை கூறி ஜாமீன் கோரி மேல்முறையீடு மனு உச்சநீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டிருந்தது. அதன்படி அந்த வழக்கின் மீதான விசாரணை கடந்த வாரம் உச்ச நீதிமன்றம் நீதிபதிகள் முன்னிலையில் விசாரணைக்கு வந்த நிலையில், செந்தில் பாலாஜியின் சமீபத்திய மருத்துவ அறிக்கையினை தாக்கல் செய்யுமாறு உத்தரவிடப்பட்டிருந்தது. இதனிடையே இந்த வழக்கின் விசாரணை இன்று(நவ.,28) காலை மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது அவரின் மருத்துவ அறிக்கைகள் நீதிபதிகளிடம் சமர்ப்பிக்கப்பட்டது.
மருத்துவம் சார்ந்த காரணங்கள் தங்களுக்கு திருப்தியளிக்கவில்லை என நீதிபதிகள் கருத்து
அந்த அறிக்கைகளை ஆய்வு செய்த நீதிபதிகள், செந்தில் பாலாஜியின் உடல்நிலையினை மருந்துகள் அளிப்பதன் மூலம் குணப்படுத்தலாம் என்று கூறியுள்ளனர். மேலும் அறிக்கையில் உள்ள மருத்துவம் சார்ந்த காரணங்கள் தங்களுக்கு திருப்தியளிக்கவில்லை என்றும் நீதிபதிகள் பேலா எம். திரிவேதி, சதீஷ் சந்திர சர்மா உள்ளிட்டோர் அடங்கிய அமர்வு தெரிவித்துள்ளது. இந்நிலையில், மருத்துவ காரணங்களை முன்வைத்து தாக்கல் செய்த ஜாமீன் மனுவினை திரும்ப பெறுவதாக கூறிய செந்தில் பாலாஜி தரப்பு வழக்கறிஞர், சாதாரணமான ஜாமீன் மனுவினை கீழமை நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்போவதாக கூறியுள்ளார். இதனையடுத்து அதனை ஏற்ற நீதிபதிகள் செந்தில் பாலாஜியின் ஜாமீன் மனுவினை வாபஸ் பெறுவதற்கு அனுமதி வழங்கியதோடு, வழக்கினை தள்ளுபடி செய்து உத்தரவிட்டுள்ளது.