இந்தியாவின் டாப் 10 பணக்காரர் பட்டியலில் இடம் பெற்றுள்ள ஒரே பெண்- யார் அவர்?
இந்தியாவின் டாப் 10 பணக்காரர்கள் பட்டியலில் ஒரே ஒரு பெண் மட்டும் இடம் பெற்றுள்ளது ப்ளூம்பெர்க் நிறுவனம் வெளியிட்டுள்ள தகவலில் தெரியவந்துள்ளது. ப்ளூம்பெர்க் நிறுவனம் பணக்காரர்கள் பட்டியலை வெளியிட்டுள்ளது. அதில் 239 பில்லியன் அமெரிக்க டாலர்கள் சொத்து மதிப்புடன் எலான் மஸ்க் உலகின் பணக்காரர்கள் பட்டியலில் முதலிடத்தில் உள்ளார். 169 பில்லியன் அமெரிக்க டாலர்கள் சொத்து மதிப்புடன் பெர்னார்ட் அர்னால்ட் இரண்டாம் இடத்திலும், அமேசான் நிறுவனர் ஜெஃப் பெசோஸ் 151 பில்லியன் அமெரிக்க டாலர்களுடன் மூன்றாவது இடத்தில் உள்ளார். ரிலையன்ஸ் குழுமத்தின் தலைவரான முகேஷ் அம்பானி 86.7 பில்லியன் டாலர் சொத்து மதிப்புடன் உலக அளவில் பதினோராவது இடத்திலும், இந்திய அளவில் முதலிடத்தில் உள்ளார்.
பணக்காரர்கள் பட்டியலில் இடம் பெற்றுள்ள சாவித்ரி ஜிண்டால்
இந்தியாவில் டாப் 10 பணக்காரர்கள் பட்டியலில் ஒரே ஒரு பெண்ணாக சாவித்ரி ஜிண்டால் இடம்பெற்றுள்ளார். 18.2 பில்லியன் அமெரிக்க டாலர்கள் சொத்து மதிப்புடன் உலக அளவில் 90 ஆவது பணக்காரராகவும், இந்திய அளவில் ஒன்பதாவது பெரிய பணக்காரராகவும் உள்ளார். ஓபி ஜிண்டால் குழுமத்தின் தலைவராக உள்ள சாவித்ரி ஜிண்டால் அசாம் மாநிலத்தின் தின்சூக்கியா பகுதியில் பிறந்தவர். இவரது கணவர் ஓபி ஜிண்டால் இறந்தபின் அந்த குடும்பத்தின் தலைவர் பொறுப்பை ஏற்றார். ஓபி ஜிண்டால் குழுமம் மின்சார உற்பத்தி, சுரங்கங்கள், தொழில்துறை எரிவாயு உள்ளிட்ட துறைகளில் முன்னோடியாக விளங்குகிறது.