Page Loader
ஐஎஸ்ஐஎஸ் பயங்கரவாத அமைப்பின் இந்திய பிரிவு முன்னாள் தலைவர் சிகிச்சை பலனின்றி உயிரிழப்பு
ஐஎஸ்ஐஎஸ் பயங்கரவாத அமைப்பின் இந்திய பிரிவு முன்னாள் தலைவர் மரணம்

ஐஎஸ்ஐஎஸ் பயங்கரவாத அமைப்பின் இந்திய பிரிவு முன்னாள் தலைவர் சிகிச்சை பலனின்றி உயிரிழப்பு

எழுதியவர் Sekar Chinnappan
Jun 28, 2025
06:07 pm

செய்தி முன்னோட்டம்

தடைசெய்யப்பட்ட இந்திய மாணவர்கள் இஸ்லாமிய இயக்கத்தின் (சிமி) முன்னாள் மூத்த நிர்வாகியும், இந்தியாவில் ஐஎஸ்ஐஎஸ் நடவடிக்கைகளின் தலைவராக இருந்ததாகக் கூறப்படுபவருமான சாகிப் நாச்சன், மூளை ரத்தக்கசிவு காரணமாக டெல்லியின் சஃப்தர்ஜங் மருத்துவமனையில் சனிக்கிழமை (ஜூன் 28) பிற்பகல் காலமானார். அவருக்கு வயது 57. டெல்லிக்கும் மகாராஷ்டிராவின் பட்கா பகுதிக்கும் இடையில் செயல்படும் ஒரு பெரிய ஐஎஸ்ஐஎஸ் பயங்கரவாத யூனிட்டில் பங்கு வகித்ததாகக் கூறப்படும் குற்றச்சாட்டில் 2023 முதல் திகார் சிறையில் நீதித்துறை காவலில் இருந்த நாச்சன், காவலில் இருந்தபோது உடல்நிலை மோசமடைந்ததால் கடந்த செவ்வாய்க்கிழமை மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அவர் நான்கு நாட்கள் கண்காணிப்பில் இருந்த நிலையில், சனிக்கிழமை மதியம் 12:10 மணிக்கு சிகிச்சை பலனின்றி இறந்தார் என்பதை மருத்துவமனை அதிகாரிகள் உறுதிப்படுத்தினர்.

பின்னணி

சாகிப் நாச்சன் பின்னணி

மகாராஷ்டிராவின் தானே மாவட்டத்தில் உள்ள பட்கா நகரைச் சேர்ந்த சாகிப் நாச்சன், 1990களின் பிற்பகுதியிலும் 2000களின் முற்பகுதியிலும் சிமியில் ஒரு முக்கிய நபராக இருந்தார். 2002-2003 ஆம் ஆண்டு மும்பை சென்ட்ரல், வைல் பார்லே மற்றும் முலுண்ட் ரயில் நிலையத்தில் நடந்த குண்டுவெடிப்புகளில் ஈடுபட்டதற்காக அவர் தேசிய அளவில் கவனத்தை ஈர்த்தார். ஏகே-56 துப்பாக்கி உட்பட சட்டவிரோத ஆயுதங்களை வைத்திருந்ததற்காக பயங்கரவாதத் தடுப்புச் சட்டத்தின் கீழ் தண்டனை பெற்ற நாச்சன், 2017 இல் விடுவிக்கப்படுவதற்கு முன்பு 10 ஆண்டுகள் சிறைத்தண்டனை அனுபவித்தார். இன்னார் டெல்லி-பட்கா ஐஎஸ்ஐஎஸ் பயங்கரவாத நெட்வொர்க் வழக்கில் முக்கிய குற்றவாளியாக 2023 ஆம் ஆண்டு தேசிய புலனாய்வு அமைப்பால் (என்ஐஏ) மீண்டும் கைது செய்யப்பட்டு, விசாரணை கைதியாக சிறையில் இருந்தார்.