எல்.கே.அத்வானியின் இல்லத்திற்கு சென்று பாரத ரத்னா விருது வழங்கினார் குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு
எல்.கே.அத்வானியின் இல்லத்திற்கு சென்று அவருக்கு பாரத ரத்னா விருதை குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு இன்று வழங்கியுள்ளார். இதற்காக ஏற்பாடு செய்யப்பட்டிருந்த நிகழ்ச்சியில் பிரதமர் மோடியும் கலந்து கொண்டார். இரண்டு முன்னாள் பிரதமர்கள் உட்பட ஐந்து புகழ்பெற்ற நபர்களுக்கு மதிப்புமிக்க பாரத ரத்னா விருதை நேற்று குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு வழங்கினார். முன்னாள் பிரதமர்கள் சௌத்ரி சரண் சிங் மற்றும் பி.வி.நரசிம்ம ராவ், பிரபல விவசாய விஞ்ஞானி எம்.எஸ்.சுவாமிநாதன், பீகார் முன்னாள் முதல்வர் கர்பூரி தாக்கூர் மற்றும் பாரதிய ஜனதா கட்சியின் மூத்த தலைவர் எல்.கே. அத்வானி ஆகியோர் நேற்று இந்த விருதை பெற்றனர்.
விருதை பெற்றவர்களில் அத்வானி மட்டுமே உயிரோடு இருக்கிறார்
இந்த விருதை பெற்றவர்களில் அத்வானி மட்டுமே உயிரோடு இருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது. நரசிம்ம ராவின் விருதை அவரது மகன் பி.வி.பிரபாகர் ராவ் நேற்று பெற்று கொண்டார். சௌத்ரி சரண் சிங்கின் விருதை அவரது பேரன் ஜெயந்த் சிங் நேற்று பெற்று கொண்டார். எம்.எஸ்.சுவாமிநாதனின் மகள் நித்யா ராவ் அவரது விருதை நேற்று வாங்கி கொண்டார். கர்பூரி தாக்கூரின் விருதை அவரது மகன் ராம் நாத் தாக்கூர் நேற்று பெற்று கொண்டார். அத்வானிக்கு பாரத ரத்னா விருதை வழங்க குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு இன்று அவரது இல்லத்திற்குச் சென்றார். 96 வயதான அத்வானியின் உடல்நலக் குறைவைக் கருத்தில் கொண்டு இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக பாஜக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.