Page Loader
'நாட்டை நடத்த ஒருமித்த கருத்து முக்கியம்': நாடாளுமன்ற கூட்டத் தொடருக்கு முன்னதாக பிரதமர் மோடி பேச்சு 

'நாட்டை நடத்த ஒருமித்த கருத்து முக்கியம்': நாடாளுமன்ற கூட்டத் தொடருக்கு முன்னதாக பிரதமர் மோடி பேச்சு 

எழுதியவர் Sindhuja SM
Jun 24, 2024
11:14 am

செய்தி முன்னோட்டம்

18வது மக்களவைக்கு புதிய எம்.பி.க்களை வரவேற்ற பிரதமர் மோடி, நாட்டை நடத்த ஒருமித்த கருத்து முக்கியம் என்று கூறினார். 18வது மக்களவையின் முதல் கூட்டத் தொடருக்கு முன்னதாக பேசிய பிரதமர் மோடி, நாட்டின் நலன் தொடர்பான முடிவுகளை எடுக்கும்போது ஒருமித்த கருத்து தேவை என்று கூறினார். NDA அரசாங்கம் தொடர்ந்து மூன்றாவது முறையாக வெற்றி பெற்றாலும், தனி பெரும்பானமையை பெறாமல் அக்கட்சி வெற்றி பெற்றிருப்பதால், பிரதமரின் இந்த கருத்துக்கள் முக்கியத்துவம் பெறுகின்றன. நாடாளுமன்றக் கூட்டத் தொடர் தொடங்குவதற்கு முன் தனது வழக்கமான உரையை பேசிய பிரதமர் மோடி, தனது கூட்டணிக் கட்சிகளிடையே ஒருமித்த கருத்துடன் மக்களின் எதிர்பார்ப்புகளை தனது அரசாங்கம் நிறைவேற்றும் என்று கூறினார்.

இந்தியா 

 'அனைவரையும் ஒன்றிணைத்து செயல்படுவோம்': பிரதமர் 

"கடந்த 10 ஆண்டுகளில், நாங்கள் எப்போதும் ஒரு பாரம்பரியத்தை நடைமுறைப்படுத்த முயற்சித்தோம். ஏனென்றால் அரசாங்கத்தை நடத்துவதற்கு பெரும்பான்மை தேவை என்று நாங்கள் நம்புகிறோம். ஆனால் நாட்டை நடத்துவதற்கு ஒருமித்த கருத்து மிகவும் முக்கியமானது. எனவே, இது எங்கள் நிலையான முயற்சியாக இருக்கும். பாரத தாய் மற்றும் 140 கோடி மக்களின் அபிலாஷைகள் மற்றும் லட்சியங்களை, அனைவரின் ஒப்புதலுடனும், அனைவரையும் ஒன்றிணைப்பதன் மூலமும் நிறைவேற்றுவோம்'' என்று அவர் கூறினார். "அரசியலமைப்புச் சட்டத்தின் புனிதத்தைப் பேணுவதன் மூலம், அனைவரையும் ஒன்றிணைத்து, முடிவுகளை விரைவுபடுத்த நாங்கள் விரும்புகிறோம்," என்று அவர் மேலும் கூறினார்.