டெல்லியில் பெய்த மிதமழைக்கு பிறகு, காற்றின் தரம் சற்றே உயர்வு
தலைநகர் டெல்லியில் இன்று காலை பெய்த லேசான மழைக்குப் பிறகு, மாசுகாற்றும், மூடுபனியும் சற்றே குறைந்துள்ளது. அதனால் புது டெல்லியில் காற்றின் தரம் சற்றே அதிகரித்துள்ளதாகவும், இருப்பினும் அது 'தீவிரம்' என்ற வரம்பில் தான் உள்ளதாகவும் செய்திகள் தெரிவிக்கின்றன. எனினும், இன்றும் மழை பொழியும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதற்கிடையே, மோசமான காற்றின் தரத்தை கட்டுப்படுத்த, டெல்லி முழுவதும் செயற்கை மழையை பெய்விக்க இந்திய தொழில்நுட்ப நிறுவனத்துடன் (ஐஐடி) டெல்லி அரசு திட்டமிட்டு வருகிறது. உலக சுகாதார அமைப்பு பரிந்துரைத்த அளவை விட 100 மடங்கு அதிகமான தீங்கு விளைவிக்கும் கடுமையான மாசுபாட்டில், புது தில்லி தற்போது தள்ளாடிக்கொண்டிருக்கிறது. டெல்லியில் இன்று காலை காற்றின் தரம் 407 ஆக இருந்தது என்று SAFAR தெரிவித்துள்ளது.