எதன் அடிப்படையில் செந்தில் பாலாஜி அமைச்சர் பதவியிலிருந்து நீக்கம்? வைரலாகும் ஆளுநர் ரவியின் கடிதங்கள்
சட்டவிரோத பணபரிமாற்ற வழக்கில், அமலாக்கத்துறையினரால் கைது செய்யப்பட்டு தற்போது நீதிமன்ற காவலில் இருக்கும் அமைச்சர் செந்தில் பாலாஜியின், அமைச்சர் பதவியை நீக்க வேண்டும் என நேற்று இரவு ஆளுநர் ஆர்.என்.ரவி அதிரடியாக உத்தரவு பிறப்பித்தார். ஆனால், தமிழக அரசிடம் இருந்து இதற்கான பதில் வரும் முன்னரே, ஐந்து மணி நேரத்தில் அந்த உத்தரவு திரும்ப பெறப்பட்டது. அமைச்சரை நீக்குவதற்கு, அரசியல் சாசன விதிகள்படி ஆளுநருக்கு எந்த அதிகாரமும் இல்லை என ஆளுங்கட்சியினர் அறிக்கை தெரிவித்துவரும் இந்த நேரத்தில், எதன் அடிப்படையில் ஆளுநர் ரவி, இந்த அதிரடி உத்தரவை வெளியிட்டார் என்பதற்கு ஆதாரமாக, முதல்வர் ஸ்டாலினுக்கு அவர் அனுப்பிய கடிதங்கள் வைரலாகி வருகின்றன.
வைரலாகும் ஆளுநரின் கடிதங்கள்
வியாழக்கிழமை இரவு 7 மணிக்கு அமைச்சர் பதவி நீக்கம் செய்யப்பட்டதாக முதல் கடிதம் வெளியானது. அதில் "திரு.வி செந்தில் பாலாஜி அமைச்சராக நீடிப்பதால் சட்ட நடைமுறைகளுக்கு இடையூறு ஏற்பட்டு, நீதியின் போக்கை சீர்குலைக்கும் என்ற அச்சம் நிலவுகிறது..இத்தகைய சூழ்நிலையில், அரசியல் சட்டத்தின் 154, 163 மற்றும் 164 பிரிவுகளின் கீழ், எனக்கு வழங்கப்பட்டுள்ள அதிகாரங்களின்படியும், வி.செந்தில் பாலாஜியை, உடனடியாக அமைச்சர்கள் குழுவிலிருந்து நீக்குகிறேன்" எனக்கூறப்பட்டுள்ளது. தொடர்ந்து, இரவு 11:45 மணியளவில், "அட்டார்னி ஜெனரலின் கருத்தை கேட்பது புத்திசாலித்தனமாக இருக்கும் என்று மாண்புமிகு மத்திய உள்துறை அமைச்சர் எனக்கு அறிவுறுத்தியுள்ளார். அதன்படி, அவரை அணுகவுள்ளேன். இதற்கிடையில், என்னிடம் இருந்து மறுதகவல் வரும் வரை, செந்தில் பாலாஜியின் பதவி நீக்க உத்தரவு ஒத்திவைக்கப்படும்" என கூறியுள்ளார்.