Page Loader
காவலில் இருந்த இந்திய ராணுவ வீரரை மனரீதியாக கொடுமைப்படுத்திய பாகிஸ்தான்
BSF வீரர் பூர்ணம் குமார் நேற்று இந்தியாவிடம் ஒப்படைக்கப்பட்டார்.

காவலில் இருந்த இந்திய ராணுவ வீரரை மனரீதியாக கொடுமைப்படுத்திய பாகிஸ்தான்

எழுதியவர் Venkatalakshmi V
May 15, 2025
01:32 pm

செய்தி முன்னோட்டம்

கடந்த ஏப்ரல் 23 அன்று பஞ்சாபில் உள்ள சர்வதேச எல்லையில் கைது செய்யப்பட்ட BSF வீரர் பூர்ணம் குமார் நேற்று இந்தியாவிடம் ஒப்படைக்கப்பட்டார். 21 நாட்கள் பாகிஸ்தான் காவலில் இருந்த அவரிடம் இந்திய ராணுவ படையினர் விசாரணை மேற்கொண்டனர். அப்போது பூரணம் குமார் தான் பாகிஸ்தானில் எவ்வாறு நடத்தப்பட்டார் என்பதை குறித்து விவரித்ததாக கூறப்படுகிறது. பாகிஸ்தான் ராணுவம், காவலில் இருந்த பூர்ணம் குமார் ஷாவின் கண்களை கட்டி, தூங்க விடாமல் தடுத்து, தொடர்ச்சியாக வார்த்தைகளால் அவமானப்படுத்தியதாக வட்டாரங்கள் கூறியதாக இந்தியா டுடே செய்தி தெரிவிக்கிறது. பூர்ணம் குமார் ஷா உடல் ரீதியான சித்திரவதைக்கு ஆளாகவில்லை என்றாலும், அடிப்படை தேவைகள் பலவும், பல் துலக்குவது உட்பட அனுமதிக்கப்படவில்லை என்று அந்த செய்தி தெரிவித்தது.

விவரங்கள்

சிறைபிடிக்கப்பட்ட பிறகு மூன்று இடங்களுக்கு மாற்றப்பட்ட வீரர்

ஏப்ரல் 23 ஆம் தேதி ஃபெரோஸ்பூர் செக்டாரில் கடமையின் போது தவறுதலாக பாகிஸ்தான் எல்லைக்குள் நுழைந்ததால், பிஎஸ்எஃப் ஜவான் பாகிஸ்தான் ரேஞ்சர்களால் கைது செய்யப்பட்டார். பூர்ணம் குமார் ஷா, சிறைபிடிக்கப்பட்ட காலம் முழுவதும், பாகிஸ்தானில் உள்ள மூன்று தெரியாத இடங்களுக்கு அழைத்துச் செல்லப்பட்டார். அவற்றில் ஒன்று விமானப்படை தளத்திற்கு அருகில் இருந்தது, அங்கு அவர் விமானங்களின் சத்தங்களைக் கேட்க முடிந்தது. இந்த நகர்வுகளின் போது, ​​ஜவான் பெரும்பாலும் கண்கள் கட்டப்பட்டே வைக்கப்பட்டார். ஒரு இடத்தில், அவர் ஒரு சிறை அறையில் அடைக்கப்பட்டார்.

விசாரணை

BSF வீரரிடம் இந்தியாவின் ராணுவத்தை பற்றி விசாரித்த பாகிஸ்தான்

பூர்ணம் குமார் ஷாவிடம் எல்லையில் உள்ள BSF படைகள் குறித்து பாகிஸ்தான் விசாரித்ததாகவும் அந்த செய்தி கூறுகிறது. மேலும், பொதுமக்கள் உடையில், எல்லையில் எல்லைப் பாதுகாப்புப் படையினர் நிலைநிறுத்தப்படுவது குறித்து ஷாவிடம் விசாரித்ததாகவும், சர்வதேச எல்லையில் பணியமர்த்தப்பட்டுள்ள மூத்த அதிகாரிகள் குறித்த விவரங்களைக் கோரியதாகவும் வட்டாரங்கள் தெரிவித்தன. தொடர்பு விவரங்களை வழங்கவும் அவர் வலியுறுத்தப்பட்டுள்ளார். ஆனால் ஷா பிடிபட்ட நேரத்தில் BSF நெறிமுறையின்படி, மொபைல் போன் வைத்திருக்காததால், அவரால் தொடர்பு எண்களை வழங்க முடியவில்லை. அட்டாரி-வாகா எல்லையில் பிஎஸ்எஃப் ஜவான் இந்திய அதிகாரிகளிடம் ஒப்படைக்கப்பட்ட பிறகு, ஷா தனது குடும்பத்தினருடன் பேச அனுமதிக்கப்பட்டார். பின்னர் அவர் முறையான விசாரணைக்கு உட்படுத்தப்பட்டார். நெறிமுறையின்படி, பாகிஸ்தான் காவலில் இருந்தபோது அவர் அணிந்திருந்த ஆடைகள் பரிசோதிக்கப்பட்டு அப்புறப்படுத்தப்பட்டன.