
இந்தியா- கனடா உறவில் முன்னேற்றம்; தூதர்களை மீண்டும் பணியில் அமர்த்த இருநாடுகளும் ஒப்புதல்
செய்தி முன்னோட்டம்
கனனாஸ்கிஸில் நடைபெற்ற ஜி7 உச்சிமாநாட்டின் போது பிரதமர் நரேந்திர மோடி, கனடா பிரதமர் மார்க் கார்னி உடன் இருதரப்பு சந்திப்பை நடத்தினார்.
அதைத்தொடர்ந்து, ஒரு குறிப்பிடத்தக்க ராஜதந்திர திருப்புமுனையாக, இந்தியாவும், கனடாவும் இருநாட்டு தலைநகரங்களில் உயர் ஸ்தானிகர்களை மீண்டும் அமைக்க ஒப்புக் கொண்டுள்ளன.
முன்னாள் கனேடிய பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோவின் நிர்வாகத்தின் கீழ் இருநாட்டின் உறவுகளும் முறிந்த நிலையில், தற்போது இந்த முடிவு எடுக்கப்பட்டது வரவேற்பினை பெற்றுள்ளது.
இந்த சந்திப்பு குறித்து விளக்கமளித்த வெளியுறவுச் செயலாளர் விக்ரம் மிஸ்ரி,"இந்த மிக முக்கியமான உறவில் ஸ்திரத்தன்மையை மீட்டெடுக்க அளவீடு செய்யப்பட்ட நடவடிக்கைகளை எடுக்க பிரதமர்கள் ஒப்புக்கொண்டனர். மேலும் ஒப்புக் கொள்ளப்பட்ட இந்த நடவடிக்கைகளில் முதலாவது, தலைநகரங்களில் உயர் ஸ்தானிகர்களை விரைவில் மீட்டெடுப்பதாகும்" என்று கூறினார்.
வர்த்தகம்
வர்த்தக முக்கியத்துவம் கொண்ட பேச்சுவார்த்தை
பிரதமர் மோடியும் கார்னியும் தங்கள் சந்திப்பின் போது, இரு நாடுகளுக்கும் இடையே தடைபட்ட வர்த்தக பேச்சுவார்த்தைகள் குறித்தும் பேசினர்.
"தற்போது இடைநிறுத்தப்பட்டுள்ள வர்த்தக பேச்சுவார்த்தைகளைக் கருத்தில் கொண்டு, இரு தலைவர்களும் தங்கள் அதிகாரிகளுக்கு விரைவில் பேச்சுவார்த்தை நடத்த அறிவுறுத்த முடிவு செய்தனர்," என்று மிஸ்ரி மேலும் கூறினார்.
இரு தரப்பினரும் மீண்டும் பேச்சுவார்த்தையை தொடங்கி, நல்லுறவை தொடர ஆர்வமாக இருப்பதாகக் மிஸ்ரி குறிப்பிட்டார்.
இரு தலைவர்களும் நீண்டகாலமாக நிலவும் மக்கள் உறவுகள், வணிக தொடர்புகளை விரிவுபடுத்துதல் மற்றும் இந்தோ-பசிபிக் பிராந்தியத்தில் வளர்ந்து வரும் ஒத்துழைப்பு ஆகியவற்றை பேசியதாக கூறப்படுகிறது.
இந்தியாவிற்கும் கனடாவிற்கும் இடையிலான நிலையான விநியோகச் சங்கிலிகள் மற்றும் சுத்தமான எரிசக்தி கூட்டாண்மைகள் மூலம் பொருளாதார வளர்ச்சியை அதிகரிப்பது குறித்தும் அவர்கள் விவாதித்தனர்.