'வெடிகுண்டு வைத்தது தமிழ்நாட்டுகாரர் தான்' என்று கூறியதற்கு மன்னிப்பு கோரினார் மத்திய அமைச்சர் ஷோபா கரந்த்லாஜே
மார்ச் 1 ஆம் தேதி ராமேஸ்வரம் கபேயில் நடந்த குண்டுவெடிப்பில் தொடர்புடைய சந்தேக நபர் தமிழகத்தைச் சேர்ந்தவர் தான் என்று கூறியதற்கு மத்திய அமைச்சர் ஷோபா கரந்த்லாஜே மன்னிப்பு கோரியுள்ளார். "எனது தமிழ் சகோதர சகோதரிகளுக்கு, எனது வார்த்தைகள் இருளை ஏற்படுத்தவில்லை என்பதை நான் தெளிவுபடுத்த விரும்புகிறேன். எனது கருத்து சிலருக்கு வலியை ஏற்படுத்தி இருக்கிறது என்பதை நான் காண்கிறேன். அதற்காக, நான் மன்னிப்பு கேட்டுக்கொள்கிறேன். கிருஷ்ணகிரி வனப்பகுதியில் பயிற்சி பெற்று, ராமேஸ்வரம் கஃபே குண்டுவெடிப்பில் தொடர்புடையவரை பற்றி தான் நான் பேசினேன். மனதால் பாதிக்கப்பட்ட தமிழகத்தைச் சேர்ந்த அனைவரிடமும், என் இதயத்தின் ஆழத்தில் இருந்து மன்னிப்பு கேட்டுக்கொள்கிறேன்." என்று மத்திய அமைச்சர் ஷோபா கரந்த்லாஜே தெரிவித்துள்ளார்.
ட்விட்டரில் மன்னிப்பு கோரினார் மத்திய அமைச்சர் ஷோபா கரந்த்லாஜே
முதல்வர் மு.க.ஸ்டாலினை விமர்சித்து பேசிய அமைச்சர் ஷோபா கரந்த்லாஜே
தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் இந்துக்கள் மற்றும் பாஜக தொண்டர்களை குறிவைக்க தீவிரவாத சக்திகளை ஊக்கப்படுத்துவதாகவும் மத்திய அமைச்சர் குற்றம்சாட்டினார். "மிஸ்டர் ஸ்டாலின், உங்கள் ஆட்சியில் தமிழகத்துக்கு என்ன ஆயிற்று? உங்கள் அரசியல், இந்துக்கள் மற்றும் பாஜகவினர் மீது இரவும் பகலும் தாக்குதல் நடத்த தீவிரவாத சக்திகளை ஊக்கப்படுத்தியுள்ளது. நீங்கள் கண்ணை மூடி கொள்கிறீர்கள். ஆனால், ஐ.எஸ்.ஐ.எஸ் பயங்கரவாத அமைப்புகளின் செயலை போல் இங்கு அடிக்கடி குண்டுவெடிப்புகள் கண்மூடித்தனமாக வெடிக்கின்றன" என்று கரந்த்லாஜே முன்பு கூறியிருந்தார். இந்நிலையில், இந்த வார்த்தைகளை கூறியதற்கு அவர் மன்னிப்பு கோரியுள்ளார்.