
இடி மின்னலுடன் இன்று மழை பெய்ய வாய்ப்பு: வானிலை மையம் தகவல்
செய்தி முன்னோட்டம்
வளிமண்டல சுழற்சி காரணமாக, இன்று தமிழகத்தில் சில இடங்களில் இடி மின்னலுடன் மிதமான மழை பெய்யக்கூடும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
அவர்கள் வெளியிட்ட அறிக்கையில், நேற்று காலை வரை கடந்த 24 மணி நேரத்தில், திருநெல்வேலி மாவட்டத்தின் நாங்குநேரியில் 3 செ.மீ. மழை பதிவானது என கூறப்பட்டுள்ளது.
மேலும், கோவை மாவட்டம் ஆழியாறு, தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி, கன்னியாகுமரி மாவட்டத்தில் நாகர்கோவில், சுருளக்கோடு, பேச்சிப்பாறை, மற்றும் விருதுநகர் மாவட்டம் வெம்பக்கோட்டை ஆகிய இடங்களில் தலா 2 செ.மீ. மழை பெய்ததாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.
மழை
அடுத்த 5 நாட்களுக்கு தமிழகத்தில் மழை பெய்யும்
தென் மாவட்டங்களின் கடலோர பகுதிகளுக்கு மேல் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுவதால், தமிழகம், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் இடி மின்னலுடன் மிதமான மழை பெய்யக்கூடும்.
இந்த மழை 28ம் தேதி வரை சில இடங்களில் தொடரலாம்.
இதற்கிடையில், 26ம் தேதி வரை, சில இடங்களில் இயல்பை விட 3 டிகிரி செல்ஷியஸ் அதிகமாக வெப்பநிலை பதிவாகலாம்.
சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் இன்று வானம் ஓரளவு மேகமூட்டமாக காணப்படும். அதிகபட்ச வெப்பநிலை சுமார் 37 டிகிரி செல்ஷியசாக இருக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
நேற்று மாலையின் நிலவரப்படி, ஈரோடு, கரூர் பரமத்தி, மதுரை மற்றும் தஞ்சாவூர் நகரங்களில் 39 டிகிரி செல்ஷியஸ் (102°F) வெப்பம் பதிவானது.