
தமிழகத்தில் ஜூன் 10 முதல் 12 வரை கனமழைக்கு வாய்ப்பு: வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை!
செய்தி முன்னோட்டம்
தமிழகத்தின் பல பகுதிகளில் ஜூன் 10, 11, 12 ஆகிய தேதிகளில் கனமழை பெய்யக்கூடிய வாய்ப்பு இருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. தென்னிந்திய பகுதிகளின் மேல் நிலவும் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாக இந்த மழை ஏற்படலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. குறிப்பாக 06 முதல் 08 ஜூன் வரை, தமிழகத்தில், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் சில இடங்களில் இடி மின்னலுடன் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். அதோடு, 09 மற்றும் 10 ஜூன் தேதிகளில், இடி, மின்னல் மற்றும் பலத்த காற்றுடன் மழை ஏற்படலாம். இதனால் கடலூர், கள்ளக்குறிச்சி, விழுப்புரம் மாவட்டங்களில் மற்றும் புதுச்சேரியில் கனமழை பெய்யும் சாத்தியம் அதிகம் என கணிக்கப்பட்டுள்ளது.
சென்னை
சென்னையில் மேகமூட்டம் நிலவும்
வரும் ஜூன் 11 மற்றும் 12 தேதிகளிலும், தமிழகத்தின் பல பகுதிகளில் லேசான மழை தொடரும். குறிப்பாக தர்மபுரி, கிருஷ்ணகிரி, திருப்பத்தூர், வேலூர், ராணிப்பேட்டை, திருவள்ளூர், காஞ்சிபுரம் மற்றும் திருவண்ணாமலை போன்ற மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்யக்கூடும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. சென்னையில், ஜூன் 6 மற்றும் 7 ஆகிய தினங்களில் மேகமூட்டம் நிலவுவதுடன், ஒருசில பகுதிகளில் இடி, மின்னலுடன் லேசான மழை பெய்யக்கூடும். அதிகபட்ச வெப்பநிலை 38-39 டிகிரி செல்சியஸ் வரை இருக்கலாம். 09 மற்றும் 10 ஜூன் தேதிகளில், தென்தமிழக கடலோரம், குமரிக்கடல், மன்னார் வளைகுடா மற்றும் தெற்கு வங்கக்கடல் பகுதிகளில் சூறாவளி காற்று வீசக்கூடும் என்பதால், மீனவர்கள் கடலுக்கு செல்ல வேண்டாம் என வானிலை மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.