
தமிழகத்தில் 10 மாவட்டங்களுக்கு இன்று கனமழை எச்சரிக்கை: வானிலை ஆய்வு மையம்
செய்தி முன்னோட்டம்
தமிழகத்தில் இன்று 10 மாவட்டங்களில் கனமழை பெய்யக்கூடிய வாய்ப்பு காணப்படுவதாகவும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
தென்னிந்திய மாநிலங்களுக்கு மேலாக ஒரு வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காணப்படுவதால், இன்று தமிழகத்தில் வட மாவட்டங்களில் பெரும்பாலான இடங்களில், தென் மாவட்டங்களில் சில இடங்களில், புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளில் இடியுடன் கூடிய மிதமான மழை மற்றும் மணிக்கு 40 கி.மீ. வேகத்தில் பலத்த காற்று வீச வாய்ப்புள்ளதாக கூறப்பட்டுள்ளது.
இந்நிலை ஜூன் 16 வரை நீடிக்கும் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது.
திருவண்ணாமலை, ராணிப்பேட்டை, வேலூர், திருப்பத்தூர், விழுப்புரம், செங்கல்பட்டு, காஞ்சிபுரம், கடலூர், அரியலூர் மற்றும் மயிலாடுதுறை ஆகிய 10 மாவட்டங்களிலும் புதுச்சேரியிலும் ஓரிரு இடங்களில் கனமழை பெய்யும் என வானிலை மையம் எச்சரித்துள்ளது.
ரெட் அலர்ட்
15ஆம் தேதி நீலகிரி, கோவை, திருநெல்வேலிக்கு ரெட் அலர்ட்
வளிமண்டல மேலடுக்கு சுழற்சி நிலவி வருவதால், ஜூன் 16ஆம் தேதி வரை பல்வேறு மாவட்டங்களில் இடியுடன் கூடிய மழை நீடிக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
குறிப்பாக ஜூன் 15ஆம் தேதி நீலகிரி, கோவை, திருநெல்வேலி மாவட்ட மலைப் பகுதிகளில் கன முதல் அதிகன மழைக்கு வாய்ப்புள்ளதால் அப்பகுதிகளுக்கு ரெட் அலர்ட் அறிவிக்கப்பட்டுள்ளது.
தென்காசி மற்றும் கன்னியாகுமரி மாவட்டங்களிலும் ஓரிரு இடங்களில் கன முதல் மிக கனமழை பெய்யக்கூடும்.
சென்னையை பொறுத்தவரை, நேற்று பகலில் வெப்பம் நிலவினாலும், மாலை நேரத்தில் பல்வேறு பகுதிகளில் இடி மின்னலுடன் மழை பெய்தது.
இன்றும் வானம் மேகமூட்டத்துடன் காணப்படும். சில இடங்களில் இடியுடன் லேசான அல்லது மிதமான மழை பெய்யும். அதிகபட்ச வெப்பநிலை 100°C-102°C வரை இருக்கும் என கணிக்கப்படுகிறது.