41 ஆண்டுகளுக்கு பிறகு தலைநகரில் கொட்டி தீர்க்கும் பருவமழை
தலைநகர் டெல்லி முதற்கொண்டு, வடமாநிலங்கள் பலவற்றிலும் பருவமழை கொட்டி தீர்த்து வருகிறது. பல நகரங்களில், வெள்ளம் பெருக்கெடுத்து ஓடுகிறது. அதனால் மக்களின் இயல்பு வாழ்க்கையும் பதிப்பிற்குள்ளாகி உள்ளது. தலைநகர் டெல்லியில், அரசு அதிகாரிகளின் வார விடுமுறையை ரத்து செய்தது ஆளும் அரசு. பருவமழையை சமாளிக்கவும், நிவாரண பணிகளை மேற்கொள்ளவும், அரசு அதிகாரிகள் பணியில் இருக்க வேண்டும் எனவும் கூறப்பட்டுள்ளது. செய்திகளின்படி, 41 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு டெல்லியில் 153 மி.மீ. மழை கொட்டித் தீர்த்து வருகிறது. தாழ்வான பகுதிகளில் வெள்ள நீர் சூழ்ந்துள்ளது. இதனால், அங்கு மின்சாரமும், இணைய சேவையும் துண்டிக்கப்பட்டுள்ளது.
வெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ள ஹிமாச்சல பிரதேசம்
மலைகளால் சூழப்பட்டுள்ள ஹிமாச்சல பிரதேச மாநிலத்தில், 20 க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளதாக செய்திகள் கூறுகின்றன. மேலும் 14 க்கும் மேற்பட்ட இடத்தில் நிலச்சரிவுகள் ஏற்பட்டதாகவும், இதனால், போக்குவரத்தும் பாதிக்கப்பட்டுள்ளதாக கூறப்பட்டுள்ளது. ஜம்மு காஷ்மீர், ஹிமாச்சல பிரதேசம், உத்தரகாண்ட் போன்ற மாநிலங்களில் வரலாறு காணாத அளவிற்கு மழை கொட்டி தீர்த்து வருவதால், அங்குள்ள நதிகளில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடுகிறது. பல பாலங்கள் உடைந்து, ஊர்கள் துண்டிக்கப்பட்டுள்ளன. மழை நீரில், வாகனங்கள் அடித்து செல்லும் வீடியோவும் இணையத்தில் வைரலாகி வருகிறது. கனமழையால் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும், குர்கான் நகரில் உள்ள தனியார் அலுவலகங்களுக்கு, WFH அறிவிக்கப்பட்டுள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது.