100 வயது பாட்டிக்கு பிறந்தநாள் விழா - கடிதத்தில் பிரதமர் மோடி வாழ்த்து
புதுச்சேரி-காரைக்கால் பகுதியில் சுந்தரமூர்த்தி என்பவரது பாட்டிக்கு 100வது பிறந்தநாள் தினத்தினை கொண்டாடுவதற்காக டி.ஆர்.பட்டிணம் அபிராமி கோயிலுக்கு குடும்பத்தோடு சென்றுள்ளனர். இவருடைய தாத்தா கணபதி முதலியார் இந்தியாவின் சுதந்திர போராட்டத்தின்பொழுது ராணுவத்தில் நேதாஜி சுபாஷ் சந்திர போஸ் அவர்களின் குழுவில் நேரடியாக இருந்துள்ளார். சுதந்திரம் கிடைக்கும் வரை போராடிய இவர் கடந்த 2011ம்ஆண்டு மரணமடைந்துள்ளார். இந்நிலையில் சுதந்திர போராட்ட தியாகியின் மனைவியான காமாட்சி பாட்டிக்கு 100வது பிறந்தநாள் கொண்டாடுவது குறித்தத்தகவலை அவருடைய பேரன் சுந்தரமூர்த்தி அண்மையில் மாநில-மத்திய அரசுகளுக்கு தெரிவித்துள்ளார். அதனைத்தொடர்ந்து நேற்று(மே.,9)காமாட்சி பாட்டிக்கு பிரதமர் மோடி தனது வாழ்த்தினை கடிதம் மூலம் தெரிவித்துள்ளார். இதனை பெரும் கெளரவமாக அந்த குடும்பம் எண்ணுகிறது. இந்த பிறந்தநாள் கொண்டாட்டவிழாவின் வீடியோ இணையத்தில் வெளியாகியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.