அரசின் உரையை வாசிக்காமல், மூன்றே நிமிடத்தில் சட்டப்பேரவையில் பேச்சை முடித்த ஆளுநர்
இன்று காலை தொடங்கிய தமிழக சட்டமன்ற கூட்டத்தொடர், ஆளுநர் ஆர்.என்.ரவி உரையுடன் தொடங்கியது. எனினும் தேசிய கீதம் இசைக்கப்படவில்லை என்றும், தமிழக அரசின் உரை உண்மைக்கு மாறாக இருக்கிறது என்று கூறியும், ஆளுநர் அந்த உரையை வாசிக்காமல் பேச்சை முடித்தார். இதனால் சட்டப்பேரவையில் சலசலப்பு ஏற்பட்டது. சட்டப்பேரவை கூட்டத்தொடரை தொடங்கி வைக்க சட்டமன்றத்திற்கு வந்த ஆளுநர் ரவியை, நுழைவு வாயிலில் சபாநாயகர் அப்பாவு, சட்டசபை செயலர் சீனிவாசன் ஆகியோர் வரவேற்றனர். இதன் தொடர்ந்து போலீஸ் அணிவகுப்பு மற்றும் சிவப்பு கம்பள மரியாதையுடன், சபைக்கு வந்தார் ஆளுநர். சபையில் சபாநாயகர் இருக்கைக்கு வந்ததும் தமிழ்த்தாய் வாழ்த்து இசைக்கப்பட்ட, இதனை தொடர்ந்து ஆளுநர் தனது உரையை வாசிக்க தொடங்கினார்.
மூன்றே நிமிடத்தில் முடிந்த உரை
ஆளுநர் தனது உரையின் தொடக்கத்தில் தமிழில் முதலமைச்சர் ஸ்டாலின், சபாநாயகர் மற்றும் சட்டசபை அலுவர்களுக்கு வணக்கம் தெரிவித்தார். அதனை தொடர்ந்து ஆங்கிலத்தில் உரையை தொடர்ந்த ஆளுநர் ரவி, "தமிழக சட்டப்பேரவை தொடங்கும் போதும், முடிக்கும் போதும் தேசிய கீதம் படிக்கப்பட வேண்டும் என்ற எனது கோரிக்கை ஏற்கப்படவில்லை" என்றும், "இன்று அதை வசிக்கவில்லை" என்றும் குற்றசாட்டை வைத்தார். தொடர்ந்து, "அரசின் உரையை வாசித்தால் அரசியலமைப்பு சட்டத்தில் குழப்பம் ஏற்படும் என்பதால் வாசிக்கவில்லை. உரையில் உண்மைக்கு புறம்பான தகவல்கள் இருந்ததால் முழுமையாக வாசிக்க விரும்பவில்லை" எனவும் தெரிவி்த்தார். இதனால் அவையில் சலசலப்பு ஏற்பட்டது. அதனை தொடர்ந்து,"வாழ்க பாரதம், வாழ்க தமிழ்நாடு, ஜெய்ஹிந்த்" எனக்கூறி சுருக்கமாக தனது உரையை முடித்துக்கொண்டார் கவர்னர்.